ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறதா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியது.
Recommended Video
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி எனப்படும் ஹைடெக் சூதாட்டத்தால் பலர் கடன் வாங்கி விளையாடி அதன் மூலம் கடனாளியாகி அதை அடைக்க முடியாமல் அவதியடைகிறார்கள்.
மேலும் பலர் தங்கள் சக்திக்கு மீறி லட்சக்கணக்கில் ஆன்லைன் ரம்மிக்காக கடன் வாங்கி, கடன் கொடுத்தவர்கள் "கழுத்தை நெரிக்கும் போது" தங்கள் குடும்பங்களை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை முடிவை பலர் எடுத்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரம்! நடிகர்கள் திருந்த வேண்டும்! சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புத்திமதி!
ஆன்லைன் ரம்மி
எனவே இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.
தமிழக அரசு அறிக்கை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது / ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள். சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்.
20 மரணங்கள்
சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள்
பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.
கருத்து கேட்பு
ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது / ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோர். ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், தங்களுடைய அஞ்சல் முகவரியில் கருத்துகளை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 12.08.2022ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
அறிக்கை
ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க, 09.08.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். கருத்துக் கேட்புக் கூட்டம் 11.08.2022 அன்று மாலை 04.00 மணி முதல் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கு பெறலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
701 பக்கங்கள் அறிக்கை
இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து புதிய அவசரச் சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 701 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக முதல்வரிடம் கடந்த மாதம் 27ஆம் தேதி தாக்கல் செய்தது.
ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையை தொடங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றார்கள். ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது.