"கலைஞர் போட்ட பிச்சை".. வார்த்தையை விட்ட ஏவ வேலு.. வார்னிங் தந்த உளவுத்துறை! போனில் ஆவேசமான ஸ்டாலின்
சென்னை: சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக அமைச்சர் ஏவ வேலுவை கடிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் அமைச்சர்களையும், எம்பிக்களையும் பாஜக , அதிமுக நெருக்க தொடங்கி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூட இப்படித்தான் டெல்லியால் குறி வைக்கப்பட்டு உள்ளார். போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் தொடர்பான பண மோசடி விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரின் மீது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் 200 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர்.
கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது அமலாக்கத் துறை. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் அமைச்சர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த மீட்டிங்கில் அமைச்சர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி பேச வேண்டும். சர்ச்சைகளை எப்படி தவிர்க்க வேண்டும். எந்த முறைகேடும் செய்ய கூடாது. டெண்டர்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களை கவனமாக செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. வழக்குகள் உள்ள அமைச்சர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் தனி தனியாக பேசி உள்ளார்.
கோபம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக அமைச்சர் ஏவ வேலுவை கடிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் உருவாக்கியவர் கலைஞர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, கலைஞர் போட்ட பிச்சை " என பேசினார்.
பிச்சை என்ற வார்த்தை கூட்டத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வார்த்தை பிரயோகம் அதிமுக தரப்புக்கு சென்ற நிலையில் இதனை சர்ச்சையாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், உளவுத்துறை மூலம் இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலுவை தொலைபேசியில் பிடித்து, கடிந்து கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications