வசதிகள் சரியாக இருக்கா?..இலவச பயணம் உபயோகமா?..பேருந்தில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்
சென்னை: சென்னை அரசு பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Recommended Video
கடந்த மே மாதம் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் அவ்வப்போது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் மேற்கொள்வார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த சமயம் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளிப்பார். இந்த சந்திப்புகளின்போது சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளன. ஒரு முறை நடைப்பயிற்சிக்கு சென்ற முதல்வரிடம் பெண் ஒருவர் "எப்படி சார் இந்த வயதிலும் பிட்னஸை மெயின்டெய்ன் செய்கிறீர்கள்" என கேட்டறிந்தார்.
ஸ்கோர் செய்வாரா முதல்வர் ஸ்டாலின்.. தீபாவளி போனஸ் எப்போது.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
முதல்வர் ஸ்டாலின்
உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் முதல்வர் ஏற்படுத்தி வருகிறார். அது போல் வெளியூர்களுக்கு சென்றாலும் தான் தங்கியிருக்கும் இடங்களுக்கு வெளியே காத்திருக்கும் பொதுமக்களிடம் நலம் விசாரித்துவிட்டு குறைகளையும் கேட்டறிவார். மேலும் அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வார்.
கொளத்தூர் தொகுதி
அது போல் அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். அப்போது அவரது எம்எல்ஏ அலுவலகத்திற்கு அருகே இருந்த வீட்டில் நின்றிருந்த முதியவர்களுக்கு வணக்கம் வைத்து அவர்களிடமும் நலம் விசாரித்தார். முதல்வரின் இந்த செயல்பாடுகளால் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல்வரை எளிதில் அணுகலாம் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு வந்துவிட்டது.
தடுப்பூசி முகாம்
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை என்பதால் முகாம்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்பதால் கடந்த வாரம் 6 ஆவது கட்ட தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
முகாம்
அவ்வாறு ரத்து செய்யப்பட்ட முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திநகர்- கண்ணகி நகர் இடையே செல்லும் எம்19பி பேருந்து அவ்வழியாக வந்தது.
அரசு பேருந்து
அப்போது முதல்வர் ஸ்டாலின் திடீரென அந்த பேருந்தில் ஆய்வு செய்தார். பேருந்தில் முதல்வர் ஏறியதை பார்த்த பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்ற முதல்வர் ஸ்டாலின் , அங்கிருந்தோரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் கேட்டறிந்தார்.
இலவச பேருந்து
அந்த பேருந்தில் ஒரு பெண் பயணி, மகளிருக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட திட்டங்களை வரவேற்று அவரது கால்களில் விழுந்தார். முதல்வரும் வேண்டாம்மா என தடுத்தார். எனினும் அந்த பெண் காலில் விழுந்தார். முதல்வரை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் உங்கள் ஆட்சிதான் சார் என கூறி மகிழ்ந்தனர். முதல்வரின் இந்த திடீர் ஆய்வை எதிர்பார்க்காத மக்கள் பூரிப்பில் மெய்சிலிர்த்தனர்.