"நிலைமை மோசம்".. ஸ்டாலின் போட்ட புது உத்தரவு.. இந்த 7 மாவட்டங்களில் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்!
முதல்வர் ஸ்டாலின் 7 மாவட்டங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குழந்தை திருமணம், பெண்சிசு கொலை போன்ற சமூக அவலங்களை களைவதுடன், அதற்கான சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு துறை வாரியாக இருக்கும் பிரச்சினைகள் குறித்து அந்தந்த துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு.. இந்த 3 நகராட்சிகள் விரைவில் மாநகராட்சிகளாக மாறப்போகிறது.. அரசிடம் அதிரடி திட்டம்
அந்தவகையில் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சமூக சீர்திருத்தத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பயனாளிகள்
அப்போது முதல்வர் பேசியதாவது: "மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினர், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும். பெண் கல்வி மற்றும் சமூகச் சீர்த்திருத்தங்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் குறிப்பாக, திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும்.
பெண் சிசு கொலை
குழந்தை திருமணம், பெண்சிசு கொலை போன்ற சமூக அவலங்களை களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சத்துணவு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு, உலர் உணவு பொருட்கள், சத்து மாவு, முட்டைகள் ஆகியவற்றை சுத்தமாகவும், உயர் தரமானதையும் வழங்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் வரும் உயரக்குறைவு, மிகுந்த மெலிவுத்தன்மை, ரத்தசோகை ஆகிய குறைபாடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி, தமிழகத்தை ஊட்டச்சத்து குறைபாடில்லா மாநிலமாக உருவாக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
வைப்புத்தொகை
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்ட வைப்புத்தொகை திட்டத்தில் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... திருநங்கையர் கல்வியறிவு பெற்று, சுயமாக இயங்கவும், பாதுகாப்புடன் வாழவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் உருவாக்கிட வேண்டும்" என்றார்.