ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி சட்டசபையில் விரைவில் தீர்மானம்! முதல்வர்
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி இந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், 12, ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வடமாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. எனவே 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமலானால் அந்த பிரச்சினை சரி செய்யப்படும்.
இந்த இடஒதுக்கீட்டுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது எப்போது எடுக்கப்படும் என்பதை அமைச்சர்களின் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தரவுகள் இல்லை என்பதால் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் நிலுவையில் வைத்துள்ளது.
10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த தரவுகளை சேகரிக்க பாரதிதாசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுக்கு இந்த அரசு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சிவசங்கர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காகவே 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பாமக வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் தமிழகத்தில் நடத்த முடியும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்கள் கூட்டணி கட்சியினருடன் பேசுங்கள். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்கு பாமக உறுப்பினர் கோ.க. மணி (ஜி.கே.மணி) ஆதரவு தர வேண்டும் என முதல்வர் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications