குடிநீர் ஏடிஎம் திட்டம்.. இனி தண்ணீருக்கு கவலைப்பட தேவையில்லை.. தொடங்கி வைத்த ஸ்டாலின்!
சென்னை: சென்னை மாநகராட்சி தரப்பில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், 50 குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலமாக பொதுமக்கள் 150 மில்லி லிட்டர், ஒரு லிட்டர் என்று இரு அளவுகளில் குடிநீர் பெற்று கொள்ள முடியும்.
சென்னையில் மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவர். அவர்கள் அதிகளவில் கடைகளிலேயே குடிநீர் வாங்கும் சூழல் உள்ளது. அதற்கு ரூ.10 முதல் ரூ.20 வரை செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பாக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த திட்டம் தான் குடிநீர் ஏடிஎம்.

அதாவது சென்னையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் என்று பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் ஏடிஎம்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம் மூலமாக மக்கள் 150 மில்லி லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என்று இரு அளவுகளில் குடிநீர் பெற்று கொள்ள முடியும்.
அதேபோல் பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டில்களிலும் குடிநீர் பெற்று கொள்ள முடியும். இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு தேசிய தரத்திற்கு இணையான தூய்மையான நீரை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்பட கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர் இருப்பு இல்லாத நிலையிலும், பாஸ்வர்ட் மூலமாக நீரை ரீசார்ஜ் செய்யும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த குடிநீர் ஏடிஎம்களில் கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் அறிய முடியும்.
அதேபோல் விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பு. கட்டண வசூலில் துல்லியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
இந்த நிலையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 50 குடிநீர் ஏ.டி.எம்.களை மெரினா கடற்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். வரும் காலங்களில் இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக மக்கள் வாட்டர் பாட்டில் நீர் முடிந்துவிட்டால், புதிய வாட்டர் பாட்டில் அல்லாமல் நீரை எளிதாக நிரப்ப முடியும்.
இந்த குடிநீட் ஏடிஎம் சேவையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ச்சியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கூறி வருகின்றனர். இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்து கொண்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications