கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி! நாகூர் ஹனிபாவின் பாடலை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி என்று இசைமுரசு அனீபாவின் குரலில் ஒலித்த பாடல் போல, நேற்றைய தினம் நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலை கம்பீரத் தோற்றத்தில் சிறப்புடன் இருப்பது தனக்கு மன நிறைவை தருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
தடுமாற்றம்! தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அமர சென்ற துரைமுருகன் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் பரபரப்பு
வாழ்வில் ஒரு பொன்னாள்
‘வாழ்வில் ஒரு பொன்னாள்' என்பதற்கான உண்மையான பொருளை விளக்கிடும் நாளாக மே 28 அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. நவீனத் தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்ட முதல் திருவுருவச் சிலையை இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்த நிகழ்வு என்பது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
Recommended Video
இன்னும் காதுகளில்
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவர் கலைஞர்" என்று குடியரசுத் துணைத் தலைவர் சூட்டிய புகழாரமும், தமிழுக்குத் கலைஞர் ஆற்றிய அருந்தொண்டினையும், கலைஞருடன் தனக்கு இருந்த நட்பையும், அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் மதிப்பளித்த உயர்ந்த பண்பையும் எடுத்துரைத்த விதம் இன்னமும் காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மாறாத அன்பு
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்த உங்களில் ஒருவனான நான் குறிப்பிட்டதுபோல, முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையினைத் திறந்து வைத்திட குடியரசுத் துணைத் தலைவர் மிகவும் பொருத்தமானவர் என்பதை அவரது பேச்சு நிரூபித்து விட்டது. தலைவர் கலைஞர் மீது மாறாத அன்பு கொண்டிருக்கும் குடியரத் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேனா வடிவில்
வங்கக் கடற்கரையில் கலைஞருக்கான நினைவிடம் மிகச் சிறப்பாகவும் வெகு விரைவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. தன்னிடமிருந்து செங்கோலைப் பறித்தாலும் எழுதுகோலை எவராலும் பறித்திட முடியாது என்று அடிக்கடி சொல்வார் தலைவர் கலைஞர். அதனால்தான் எழுதுகோல் (பேனா) வடிவில் அவருடைய நினைவிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
கம்பீரக் கலைஞர்
‘கம்பீரக் கலைஞர்' என்கிற இசைமுரசு அனீபா அவர்களின் குரலில் அமைந்த பாடல் போல, திருவருவச் சிலையும் அதன் திறப்பு விழாவும் சிறப்பாக அமைந்ததில் உங்களில் ஒருவனான எனக்குப் பெரும் மனநிறைவு. ‘இது நம்ம வீட்டு விழா' என்ற உணர்வுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு அரங்கத்தில் இடம் தந்து, அரங்கிற்கு வெளியேயும் அண்ணா சாலை - வாலாஜா சாலை ஓரத்திலும் திரளாக நின்று கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடியசைத்து, திருவுருவச் சிலை திறப்பு விழாவை எழுச்சிமிக்கதாக ஆக்கிய கழக உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு என் உள்ளத்திலிருந்து ஊறி வரும் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
99-ஆவது பிறந்தநாள்
ஜூன் 3, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழகமெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி கிளைகள் தோறும் நடத்தப்பட வேண்டும்.
திராவிடல் மாடல்
ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களிள் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றை பதியச் செய்திட வேண்டும்.
பயிற்சிப் பாசறை
அடுத்த ஆண்டு (2023) ஜூன் 3-ஆம் நாள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா. அதற்கு முன்னதாக, தலைவர் கலைஞரின் 99-ஆவது பிறந்த ஆண்டில் கழகத்தின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்' நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதவெறி அரசியல்
அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் வலியுறுத்தியவாறு, கழகத் தொண்டர்களை நிர்வாகிகள் அரவணைத்து உதவிகள் செய்திட வேண்டும்.