தேங்காய் சிரட்டையை குப்பைல போட்றாதீங்க.. அப்புறம் பீல் பண்ணுவீங்க!
தேங்காய் சிரட்டைகள் ஆன்லைனில் ரூ. 3000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video
சென்னை: நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையை ஆன்லைன் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேங்காய் இல்லாத சமையலை நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு, அது நம் இந்தியர்களின் உணவுப் பொருளில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சட்னி, தேங்காய் சாதம், குழம்பிற்கு அரைத்து ஊற்ற, தேங்காய்ப்பால் மற்றும் வெறும் வாயில் சாப்பிட என பல்வேறு முறைகளில் நாம் தேங்காயை உணவாக எடுத்துக் கொள்கிறோம்.
இதற்காக மார்க்கெட்டுகளில் பத்து ரூபாய் முதல் தேங்காய்கள் விலைக்கு கிடைக்கின்றன. இப்படியாக பயன்படுத்தப்பட்ட சிரட்டைகளை கிராமங்களில் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்களும் தயாரிக்கின்றனர்.
தேங்காய் சிரட்டைகள்:
தேங்காய் சிரட்டைகளில் இருந்து உருவாக்கப்படும் காப்பி கோப்பைகள் உள்ளிட்ட சமையலறைப் பாத்திரங்கள், பூங்கொத்து வைக்கும் கோப்பைகள், அழகுப் பொருட்கள் மற்றும் பட்டன்கள் போன்றவற்றிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள மக்கள் தேங்காய் சிரட்டைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
வறட்டி விற்பனை:
இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், நாம் குப்பையில் தூக்கிப் போடும் இதுபோன்ற பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றன. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வறட்டி இது போல் அதிக விலைக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.
அமேசானில் விற்பனை:
இந்நிலையில் தற்போது தேங்காய் சிரட்டைகளும் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளன. முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் இது தொடர்பாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேங்காய் சிரட்டையின் உண்மை விலை ரூ. 3 ஆயிரம் என்றும், அதனை சலுகை விலையில், ஆயிரத்து 300 ரூபாய்க்கு தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணங்கள்:
அதோடு, தேங்காய் சிரட்டையால் செய்யப்பட்ட பொருட்களும் அதிக விலைக்கு ஆன்லைனில் விற்கப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்ட கிண்ணங்கள் ரூ. 800க்கும், காபி கோப்பைகள் ரூ. 500க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
நெட்டிசன்கள் அதிர்ச்சி:
இந்த விளம்பரத்தைப் பார்த்த இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குப்பையைக்கூட காசாக்குவது இப்படித்தானா என அவர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், "தேங்காய் சிரட்டையை குப்பைல தூக்கிப் போட்றாதீங்க.. அப்புறம் பீல் பண்ணுவீங்க" என அண்ணாச்சி ரேஞ்சுக்கு டயலாக் பேசி வருகின்றனர்.