போச்சு, என் தென்னையெல்லாம் போச்சு.. ஒரு விவசாயியின் கண்ணீர் கதறல்.. வீடியோ
இயக்குனர் சரவணன் வெளியிட்ட தென்னை மரங்கள் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: "போச்சு... தோப்பில் இருந்த 1200 மரங்களில் 800 தென்னை போச்சு.." என்று பதிவிட்ட இயக்குனரின் வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னையை கிராமங்களில் மரம் என்று சொல்ல மாட்டார்கள். அது நம் வீட்டுப் பிள்ளை என்ற உணர்வில் தென்னம் பிள்ளை என்று தான் சொல்வார்கள்.
தென்னையை வளர்க்கும்போது கூட அத்தனை அக்கறை எடுத்து பிள்ளை போல வளர்ப்பார்கள். வளர்ந்து ஆளான பிள்ளை நம் கையை விட்டுப் போனால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட அதிர்ச்சி உணர்வில்தான் நாகை மாவட்டமே இருக்கிறது.
அதிர்ச்சியில் விவசாயிகள்
49 பேரை பலிகொண்ட கஜாவின் கோரதாண்டவம் பயிர்களை, தோப்புகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால் ஏக்கர் கணக்கில் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் இதுவரை கண்போல கட்டிக்காத்த விளைநிலங்கள் தங்கள் கண்ணெதிரிலேயே மூழ்கி போன அதிர்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.
இயக்குனர் சரவணன்
கடலோர மாவட்டங்களை அடியோடு புரட்டி போட்ட கஜாவின் சிறு பகுதி ஆட்டத்தை, கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் சரவணன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவாக வெளியிட்டுள்ள அந்த பதிவினை கண்டு ஏராளமானோர் மனம் கலங்கி போய் உள்ளனர். வேரோடு வீழ்ந்த தென்னந்தோப்புகள் மட்டுமே அந்த வீடியோ காட்சியில் உள்ளது. அந்த காட்சியுடன், சில வரிகளையும் சரவணன் பதிவிட்டுள்ளார்.
கதறுகிறான் விவசாயி
அதில், "தோப்பில் இருந்த 1200 மரங்களில் 800 தென்னை போச்சு..." எனக் கதறுகிறான் கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த என் நண்பன் அன்பு. 40, 50 வருட தென்னை மரங்களையும் முறித்துப் போட்டுவிட்டது காற்று. பெற்ற பிள்ளைகளை இழந்தது போல் தென்னையை இழந்து கதறுகின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்" என்று பதிவிட்டுள்ளார்.
|
கருணை கிடையாதா?
இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், ஏராளமானோர் தங்களது வருத்தங்களையும் அதில் பதிவிட்டு வருகின்றனர். பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மனதெல்லாம் பதறுகிறதே, வளர்த்த விவசாயிகளுக்கு எப்படி இருக்கும்.! இயற்கையே உனக்கு கருணை கிடையாதா என்று வாய் விட்டு குமுறத்தான் முடிகிறது நம்மால்.