ஆரம்பிச்சாச்சு.. தமிழகம் முழுக்க.. அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள் அகற்றம்.. விளம்பரம் மறைப்பு
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
நேற்று மாலை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் பதாகைகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்துவிட்டனர்.
சுனில் அரோராவின், பிரஸ் மீட் முழுதாக கூட முடிவடைவதற்குள் பதாகைகளை அகற்ற ஆரம்பித்தனர் அதிகாரிகள்.
தேர்தல் காலம்
இதற்கு காரணம், சுனில் அரோரா பிரஸ் மீட்டின் ஆரம்பத்திலேயே, தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன என அறிவித்ததுதான். இதையடுத்து பிரஸ் மீட் முடியும் முன்பாகவே வேலையை ஆரம்பித்தனர் அதிகாரிகள்.
தேர்தல் நடத்தை விதிமுறை
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷும் இது தொடர்பாக ஒரு உத்தரவு வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் பேனர்கள், கட்சிக் கொடிகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும்.
பஸ், ரயில் நிலையங்கள்
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள, வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்கள்
இதேபோல நெல்லை, மதுரை, கோவை, சேலம், வேலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களும் மறைக்கப்பட்டும், அகற்றப்பட்டும் வருகிறது