வெறும் ஆணிகளை வச்சு.. உலக நாயகனின் ஆணித்தரமான ஒரு ஓவியம்.. உலகத் தரத்தில் இருக்கே!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி ஸ்டிரிங் ஆர்ட் எனப்படும் ஒரு கலையை சீவகவழுதி (32) என்பவர் படைத்துள்ளார்.
Recommended Video
கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அரசியல்வாதிகள், நடிகர்கள், நண்பர்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் என கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் உலக நாயகனுக்கு புதுமையான முறையில் வாழ்த்துகளை தெரிவிக்க சீவகா என்பவர் புது விதமான ஓவியத்தை படைத்துள்ளார். இதன் பெயர் ஸ்டிரிங் ஆர்ட் ஆகும்.
8 கிலோ மீட்டர் நீள ஸ்ட்ரிங்
இது உலகமெங்கும் வெகு சிலராலேயே படைக்கப்படுகிறது. இந்த கலைக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இதை செய்து முடிக்க 28 நாட்கள் ஆனது. 250 மணி நேரத்தில், 13000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன. 8 கிலோ மீட்டர் நீள ஸ்ட்ரிங், 8 அடியில் மிக நீளமான மரத்தினாலான போர்டு ஆகியவை கொண்டு செய்யப்பட்டது. கலையை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல இது ஒரு வழியாகும்.
சீவகவழுதி
இந்த படைப்பை எனது ஆசான்கள், மூத்தோர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் பெருமையுடன் காண்பிக்கிறேன் என சீவகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீவகவழுதி நமது ஒன் இ்நதியா தமிழுக்கு அளித்த பேட்டியில், நான் கோவையைச் சேர்ந்தவர். எனக்கு 32 வயதாகிறது. நான் கோவை பிஎஸ்சி கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளேன்.
கிரேயான்கள்
சிறுவயதிலிருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளேன். ஆனால் எப்போதும் பென்சில், கலர் பென்சில், கிரேயான்கள், பெயின்ட் என ஒரே மீடியம் கொண்டு வரைவது என்பது நான் விரும்பவில்லை. கலையில் நிறைய புதுமைகளை புகுத்த வேண்டும் என நான் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன்.
60 ஆண்டுகள்
அதன் விளைவுதான் இந்த ஸ்ட்ரிங் ஆர்ட். இந்த கலையை செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கினேன். பின்னர் அக்டோபர் 15 ஆம் தேதி வரைந்து முடித்தேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன். கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ஒரு விழாவை கொண்டாடினார்.
நிகழ்ச்சி
அதை வைத்து 60 years of Kamalism என்ற புத்தகத்தை படைத்தேன். அதில் வலது புறம் அவர் நடித்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை பென்சில் ஷேடிங்கில் வரைந்து இடது புறம் அந்த கேரக்டர் குறித்து எழுதியிருந்தேன். இதை பார்த்த கமல்ஹாசன் என்னை வெகுவாக பாராட்டினார். இந்த புத்தகத்தை ஏப்ரல் மாதம் கமல்ஹாசன் வெளியிடுவதாக இருந்தது. கொரோனாவால் அந்த நிகழ்ச்சி ரத்தானது.
தொலைபேசியில் தொடர்பு
60 ஆண்டுகள் நிறைவு விழாவை கமல் சென்னையில் கொண்டாடிய போது நானோ கப்ஸ் ஆர்ட்டை வரைந்து கோவையில் கொண்டாடினேன். 200 சதுர அடியில் 3000 கப்களை 5 நிறங்களை பயன்படுத்தி வரைந்தேன். இது கமல்ஹாசனின் பார்வைக்கு சென்றது. என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஹைபர் ரியாலிசம்
பிரேசில் கலைஞர் ஃபெபியானோ மிலானியின் ஹைபர் ரியாலிசம் என்ற ஒரு கலையை கற்று கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அதாவது ஒரு பெயின்டிங் என்றால் ஒருவரது முகத்தை அப்படியே வரைவது, கண்ணுக்கு கீழே இருக்கும் பிக்மென்ட் முதற்கொண்டு பார்ப்பதற்கு உண்மையான தோற்றம் போல் வரைவதுதான் இந்த கலை.
பண உதவி
இந்த ஸ்ட்ரிங் ஆர்ட் வரைய எனக்கு பண உதவி செய்து ஊக்கத்தையும் அளித்தவர் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன். பொதுவாக ஸ்ட்டிரிங் ஆர்ட் வரைவோர் 3 அடி போர்ட்டில் மயில், மான் போன்ற எளிய உருவங்களையே படைப்பர். ஆனால் நானோ 8 அடியில் கமலின் உருவத்தை படைத்தேன். இந்த 28 நாட்களில் நான் நிறைய சோதனைகளை கடந்தேன்.
திறமை
விரைவில் 300 அடியில் ஒரு கலையை படைத்து அதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பவுள்ளேன். அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன். நான் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். குழந்தைகளுக்கு கலையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் நம் இந்தியாவில் திறமையானவர்கள் உருவாவார்கள்.
விழிப்புணர்வு
நானும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தித்தான் வருகிறேன். ஆனால் அரசே அந்த முயற்சியை எடுத்தால் மிகப் பெரிய மாற்றம் கிடைக்கும். இன்வெர்ட் ஆர்ட்டிலும் எனக்கு ஈடுபாடு அதிகம். ஸ்டிரிங் ஆர்ட், கப் ஆர்ட், இன்வெர்ட் ஆர்ட், பப்பிள் ஆர்ட், ஹைபர் ரியாலிசம் போன்றவை உலக நாடுகளில் பிரபலம், ஆனால் இந்தியாவில் இந்த கலை தெரிந்தவர்கள் நிறைய பேர் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். நம் இந்தியா இது போன்ற புதுமையான கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். இந்த வெளிநாட்டு கலைகள் குறித்து கமல்ஹாசன் எடுத்துரைத்தால் அது உலகளவில் போய் சேரும் என்பது எனது கருத்து என்றார் சீவகா.