தமிழக காங். கமிட்டி தலைவர் பதவி.. படைதிரட்டும் கார்த்தி சிதம்பரம்.. பணிய மறுக்கும் கே.எஸ்.அழகிரி..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் நாளுக்கு நாள் புகைச்சல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர். திருநாவுக்கரசரிடம் இருந்து தலைவர் பதவியை பறித்து அந்த இடத்திற்கு கே.எஸ்.அழகிரியை கொண்டு வந்ததே ப.சிதம்பரம் தான் எனக் கூறப்பட்டது. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தனது பல பேட்டிகளில் ப.சிதம்பரத்தை 'தலைவர் சிதம்பரம்' என்றே குறிப்பிட்டு வந்தார் கே.எஸ்.அழகிரி.
இப்படி சுமூகமாக சென்றுகொண்டிருந்த உறவில் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் விரிசல் ஏற்படத் தொடங்கியது. சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் பெயரை அறிவிக்க ராகுல் தயக்கம் காட்டிய போது, அவரிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் கே.எஸ்.அழகிரி பரிந்துபேசவில்லை என்பதில் மனஸ்தாபம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சி.பி.ஐ.யால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது அதனைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் பெரியளவில் எந்த ஆர்ப்பாட்டங்களையோ, போராட்டங்களையோ கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கவில்லை என்பது விரிசலுக்கான இரண்டாவது காரணம். பெங்களூருவில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்ட போது அங்கு காங்கிரஸ் காட்டிய எழுச்சியை தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி ஏற்படுத்தவில்லை என்பது கார்த்தி சிதம்பரத்தின் குமுறலாக இருந்தது.
இதேபோல் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் விவகாரத்திலும் ப.சி.க்கு பெரியளவில் கே.எஸ்.அழகிரி முக்கியத்துவம் கொடுக்காததால், அழகிரியா நானா என்று பார்த்துவிடுகிறேன் என்ற கோதாவில் குதித்துள்ளார் கார்த்தி சிதம்பரம். இதன் விளைவாகவே கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை மாநிலம் தழுவிய அளவில் தனது ஆதரவாளர்களை வைத்து நடத்தி வந்தார்.
இது தலைவர் என்ற முறையில் தன்னிடம் தகவல் அளிக்காமல் தன்னை அவமதிக்கும் செயல் என பொங்கினார் கே.எஸ்.அழகிரி. ஆனால் அதனை கார்த்தி சிதம்பரம் செவிமடுக்கவில்லை. இப்படி நாளுக்கு நாள் அவர்கள் இருவருக்கும் இடையேயான பனிப்போர் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிக்கை விட்டால் மதுக்கடைகளை திறந்துவிட வேண்டும் எனப் பேட்டிக்கொடுத்தார் கார்த்தி சிதம்பரம். நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுத்தால் அதிலும் கட்சியின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார் கார்த்தி சிதம்பரம். முன்னுக்கு பின் முரணாக கார்த்தி சிதம்பரம் நடந்துகொள்வதாக கே.சி.வேணுகோபால் வரை புகாரை கொண்டு சென்றார் கே.எஸ்.அழகிரி.
தன்னை பற்றி டெல்லி வரை புகார் அளிக்கும் அளவுக்கு சென்றதால் இனியும் அமைதி காக்கப்போவதில்லை என கே.எஸ்.அழகிரிக்கு எதிராக படை திரட்டி வருகிறார் கார்த்தி சிதம்பரம். பதிலுக்கு என்னதான் செய்ய முடியும் என்ற கேள்வியோடு துணிந்து நின்று போராடி வருகிறார் கே.எஸ்.அழகிரி.