கட்டாயப் படுத்தி விளையாட்டு.. மாரடைப்பால் சென்னைக் கல்லூரி மாணவி மரணம்.. மாணவர்கள் போராட்டம்!
விளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கட்டாயப்படுத்தி விளையாட வைத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெ.மஹிமா (18). இவர் கிழக்குத் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். இவர் கடந்த திங்களன்று மாலை 5.30 மணியளவில் சகமாணவிகளுடன் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடியுள்ளார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள், கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மஹிமாவைச் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உடற்கூறு ஆய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மஹிமாவின் இந்த திடீர் மரணத்தால் அவரது குடும்பத்தாரும், தோழிகளும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் கட்டாயப்படுத்தி விளையாட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த மஹிமாவை விளையாடும்படி கட்டாயப்படுத்தியதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் போரட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ''மஹிமாவை விளையாடச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார் என்று முன்பே அறிவுறுத்தவில்லை'’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.