நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் என அறிவிப்பு
சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்மையில் மத்திய கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் இந்த (2020-2021) கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் விடுமுறை, கோடை விடுமுறை அளிக்கப்படாது என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது. வாரத்தில் ஆறு நாளும் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு அவர்கள் அவர்கள் அடுத்த வகுப்பிற்கு முன்னேற்றம் செய்யப்பட்டனர். தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லூரிகளும் திறக்கப்படவில்லை.
பள்ளிகள் மட்டுமின்றி கொரோனா ஊரடங்கால் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதனால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டது.
சில திருத்தங்கள்
இதற்கிடையே கல்லூரிகள் திறப்பது மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தற்போது கல்லூரிகளை திறப்பதற்கான அறிவிப்பை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கை
இதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் (நவம்பர் 1 ஞாயிறு என்பதால் நவம்பர் 2 முதல் கல்லூரிகள் தொடங்கும் என தெரிகிறது. எனினும் இதுபற்றி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை).
பாடங்கள் நவம்பரில் தொடக்கம்
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் தொடங்க வேண்டும். அதற்கேற்ப, அனைத்து பல்கலைக் கழகங்களும் மாணவர் சேர்க்கையை அக்டோபர் மாதத்துக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
ஆறு நாளும் கல்லூரி
நவம்பர் மாதம் கல்லூரிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. புதியதாக சேர்பவர்களுக்கு ஆன்லைன் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும். நவம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அவர்களுக்கான கல்வி ஆண்டு 2021 ஆகஸ்ட் 30 வரை நடக்கும். கொரோனா தொற்றுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிகட்டும் வகையில், இந்த கல்விஆண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரி வகுப்புகள் நடைபெறும். அதேபோல அனைத்து பல்கலைக் கழகங்களும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்களுக்கும் விடுமுறையும் இல்லை. குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் ஏதும் விடாமல் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுளளது.