மார்ச் 14-ம் தேதி ராமதாசுக்கு பாராட்டு விழா... மயிலாடுதுறையில் தடபுடல் ஏற்பாடுகள்
சென்னை: டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றியதற்காக பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த மாதம் 20-ம் தேதி அதை சட்டமாகவும் கொண்டு வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக அவருக்கு வரும் 7-ம் தேதி திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தினர் பிரம்மாண்ட முறையில் பாராட்ட விழா நடத்தவுள்ளனர். அதில் முதல்வருக்கு சிறப்பு பட்டம் ஒன்றையும் அளிக்கவுள்ளனர்.
இந்நிலையில் முதல்வருக்கு வேளாண் மண்டலம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காகவும், கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை முதன் முதலில் குறிப்பிட்டதற்காகவும் பாமக நிறுவனர் ராமதாசுக்கும் பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் மார்ச் 14-ம் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்த விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கத்தினரும், பாமகவினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி இடைவிடாமல் வைத்த கோரிக்கையின் காரணமாகவே இந்த வேளாண் மண்டலம் அறிவிப்பு வெளியானதோடு, அது சட்டமாகவும் இயற்றப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். மேலும், ராமதாசுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தாம் உட்பட பாமக முன்னணி நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என அறிவித்துள்ளார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
எந்த கட்சியும் செய்யாத ஒன்றை பாமக தான் செய்துள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை தமிழகத்தில் முதலில் வலியுறுத்திய கட்சி பாமக தான் எனவும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.