புதிய தேசியக் கல்வி கொள்கை வரைவு மீது கருத்து கூறலாம்.. பொதுமக்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
சென்னை: புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கூறலாம் வாங்க என பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மும்மொழித் திட்டத்தை வலுக்கட்டாயமாக புகுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இதற்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன கஸ்தூரி ரங்கன் குழு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கையில் நாடு முழுவதிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க மத்திய அரசு முற்படும் என்பதால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினருமு் புதிய கல்வி கொள்கை இந்தி திணிப்பு என்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தும் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி அம்சங்களுக்கு வேட்டு வைக்க கூடியது என எச்சரித்துள்ளனர்
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை வரைவை www.tnscert.org என்ற தளத்தில் பள்ளிக்கல்வித்துறை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவை படித்து பார்த்து விட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் ஜூலை 25-ம் தேதிக்குள் கருத்து கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 (NEP 2019) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வசதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய கல்வி கொள்கை வரைவு மீது மாநில அளவில் கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.