ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம்.. முதல்வர் அதிரடி.. போராட்டங்களுக்கு 'செக்'
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்கள் சேகரிக்க, ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் இன்று தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின்பேரில் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசியம் தொடர்பாக அவர் பேசினார். இந்த நிலையில்தான் மாலையில் முதல்வரிடம் இருந்து ஒரு செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது.
அணி அணியாக வந்த பாமகவினர்.. சென்னை எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் போலீசார்
சமூக நீதி
அதில் அவர் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடுக்கு அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பைப் பெற்று தந்து தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து சமூகநீதி காத்த வீராங்கனை என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நலத் திட்ட பலன்கள்
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இவ்வழக்கில் எதிர்கொள்ள புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன.
பிரத்யேக ஆணையம்
கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிபரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் சாதி அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதிவாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
ஜெயலலிதா வழி
ஜெயலலிதா, சமூக நீதி காப்பதில் எந்த அளவுக்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். எனவே, ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசும் அதே உறுதியுடன் செயல்பட்டு, சமூக நீதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடியார் மூவ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால், அடுத்த சில மாதங்களுக்கு எந்தவிதமான அரசியல் கட்சிகளும் அல்லது ஜாதி அமைப்புகளும் போராட்டம் நடத்துவதற்காக தேவையில்லாமல் போய்விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலமாக பாமக கோரிக்கையை நிறைவேற்றும் முதல் அடியை எடுத்து வைத்தது போலவும் ஆயிற்று, ஜாதி அமைப்புகள் போராட்டங்களை நடத்த முடியாமல் அதை தடுப்பது போலவும் ஆயிற்று. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி சிறப்பான மூவ் செய்து உள்ளார் என்கிறார்கள் அவர்கள்.