குற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: குற்றவழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை, குற்றவழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. நட்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, குற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளை கண்டறியும் பணியில் ஈடுபடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் மீது மீண்டும் மீண்டும் வழக்குகள் போட்டு அவர்கள் மீண்டும் திருந்த முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுவது வேதனைக்குரியது என கூறியுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, குற்றவாளிகளின் மறுவாழ்வு குறித்து ஆராய்ந்து 8 வாரங்களில் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்திருந்தார்
சென்னையில் இன்று 'நிழல் இல்லை' நிஜம் மட்டும் தான்.. அபூர்வமான பூஜ்ய நிழல் நாளை ரசித்த மக்கள்
மேலும் தமிழகம் முழுவதும் 2018 டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து மாவட்ட வாரியாக 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இன்று இவ்வழக்கில் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, இந்த அறிக்கையானது முழுமையானதாக இல்லை என்று கூறி அதிருப்தி தெரிவித்தார்.
விடுதலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் நீதிபதி கூறினார். இதனையடுத்து குற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த, ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.