சீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்
Recommended Video
சென்னை: ராஜீவ்காந்தி கொலை தொடர்பான பேச்சுக்காக சீமான் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அவர் இந்த விவகாரத்தில் பிடிவாதம் பிடிப்பது நல்ல பன்பல்ல எனவும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு சீமான் பேச்சு தொடர்பாக விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் கருத்துக்கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும், போகிற போக்கில் எதையாவது பேசவேண்டும் என்பதற்காக பேசிவிட்டு செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அருகில் இருந்து காயமடைந்து பாதிக்கப்பட்டவன் தாம் எனக் கூறினார்.
இப்போது இவ்வளவு பேசும் சீமான் அப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் என வினவியுள்ளார். மேலும், ராஜீவ் கொலை குறித்தும், அந்த இடத்தில் காயமடைந்து தாம் உயிர்பிழைத்தது பற்றியும் தன்னை சந்திக்கும் போதெல்லாம் சீமான் கேட்டுத்தெரிந்துகொண்டும் இப்படி பேசுவது நியாயமா என வினவியுள்ளார்.
சீமான் பிடிவாதம் பிடிப்பதை கைவிட்டு தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும், அவ்வாறு அவர் செய்ய தவறினால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இறந்தவர்களை பற்றி பேசுவது மனிதத்தன்மையே இல்லாதவர்கள் செய்யும் செயல் என விமர்சித்துள்ளார்.