திருச்சிக்காக முட்டி மோதும் திருநாவுக்கரசர் - குஷ்பு.. ஜெயம் யாருக்கு.. குமரிக்கும் செம டிமாண்டாம்!
திருச்சி தொகுதிக்கு திருநாவுக்கரசு, குஷ்பு இருவரும் போட்டி போட்டு வருகிறார்கள்.
சென்னை: இது தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என தெரியவில்லை.. எப்பவுமே ஆகாத காங்கிரசின் திருநாவுக்கரசுக்கும் குஷ்புவுக்கும் தொகுதி விஷயத்திலும் லடாய் ஆரம்பித்துள்ளதாம்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்தான் குஷ்பு. எப்போது திருநாவுக்கரசு தலைமை பொறுப்பு எற்றாரோ அப்போதிருந்தே கட்சி தலைமை ஆபீஸ் பக்கம் குஷ்பு ஒதுங்கியே இருந்தார்.
இவரை எப்படியாவது தமிழக தலைமை பொறுப்பில் உட்கார வைத்துவிட வேண்டும் என்று டெல்லி வரை சென்று முயற்சித்தவர் இளங்கோவன் என்றுகூட அப்போது பேசப்பட்டது.
திருநாவுக்கரசு
இந்த நிலையில் திருச்சியை வைகோ கேட்டுக் கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் டெல்லி லாபி மூலமாக இதே தொகுதியை கேட்டு கொண்டிருந்தார் திருநாவுக்கரசு. முன்னாள் அமைச்சர் நேருவிடமும் ராகுல்காந்தியிடம் இது சம்பந்தமான தனது விருப்பத்தை நேரடியாகவே தெரிவித்து அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தார்.
குஷ்பு
ஆனால் இப்போது குஷ்புவும் இதே திருச்சி தொகுதி வேண்டும் என்று கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாராம். குஷ்பு தென்சென்னையை கேட்டு பார்த்தார். அங்கு கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலமானவர்கள் இருப்பதாலோ என்னவோ அது மறுக்கப்பட்டுவிட்டது.
யாருக்கு?
இப்போது திருச்சியில் அவர் சார்பாக காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்திருக்கிறார். திருச்சி யாருக்கு போக போகிறது... திருநாவுக்கரசுக்கா? குஷ்புவுக்கா என்பதுதான் போட்டியே!
ஏகப்பட்ட டிமாண்ட்
இதெல்லாம் விடுங்க.. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கும் விருப்ப மனு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் இந்த 9 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டும் ஏகப்பட்ட கிராக்கியாம். அந்த ரெண்டு தொகுதிகள் திருவள்ளூர், கன்னியாகுமரியும்தான். இந்த தொகுதிகள்தான் வேண்டும் என்று வாய்ப்பு கேட்டு ஏகப்பட்ட மனுக்கள் குவிந்துவிட்டதாம். சொன்னால் நம்ப மாட்டீங்க.. கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 26 பேர் மனு செய்திருக்கிறார்களாம்.