"வாடா.. வாடா.. செருப்பை கழட்டி விடுடா" திண்டுக்கல் சீனிவாசன் மீது மேலூர் போலீசில் திகவினர் புகார்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மேலூர் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: என்னதான் அந்த சிறுவன் தனக்கு பேரன் மாதிரி என்று திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தாலும்.. திராவிடர் விடுதலை கழகத்தினர் அமைச்சர் மீது போலீஸில் புகார் தரும் அளவுக்கு சென்றுவிட்டது.. வன்கொடுமை சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டுள்ளது இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.
நீலகிரியில் விழா ஒன்றில் கலந்து கொள்ள இன்று காலை வந்திருந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.. அப்போது வரும் வழியில் அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. செருப்பின் பக்கிளை ஒரு பழங்குடியின சிறுவனை அழைத்து கழற்றிவிடுமாறு அமைச்சர் சொன்னார்.. இந்த விவகாரம் வெடித்து சர்ச்சையானது.
"அந்த 2 பேரில் ஒருத்தன் என் பேரன் மாதிரியே.. சின்னப்பிள்ளையா இருந்தான்.. அதனாலதான் கூப்பிட்டு செருப்பு பக்கிகளை கழற்றிவிட சொன்னேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். எனினும் அமைச்சரின் விளக்கத்தை பலர் ஏற்றுகொள்ளவில்லை.. மாறாக இந்த சம்பவத்தை விமர்சித்தவாறே உள்ளனர்.
திண்டுக்கல் சீனிவாசனை போலவேதான் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். அதேபோல, பழங்குடியின சிறுவனை அவமதித்து சாதிய வெறியில் தன்னுடைய செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.
"தன் வீட்டு பேரன் போல இருந்ததால், அந்த சிறுவனை கூப்பிட்டு செருப்பை கழட்ட சொன்னேன் என்கிறாரே.. இவர் வீட்டு பேரனை முதலில் செருப்பை கழட்ட விடுவாரா? விளையாடி கொண்டிருந்த சிறுவனை கூப்பிட்டேன் என்றால், அந்த பையன் ஏன் ஸ்கூலுக்கு போகலேன்னு ஒரு அமைச்சர் கேட்ககூடாதா?" என்று தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்- 5,8- பொதுத்தேர்வு குழப்பம் எதிரொலி?
இந்நிலையில், இது சம்பந்தமாக போலீசுக்கே போய்விட்டது திராவிடர் விடுதலை கழகம்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது திராவிட விடுதலை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... மதுரை மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் இந்த புகார் பதிவாகி உள்ளது.. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் இக்கழகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இங்கு மட்டுமல்லாமல் பல இடங்களிலும் புகார்கள் தந்து வருகிறார்கள்.
ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு முன்னோடியாக உள்ள நிலையில், அந்த சர்ச்சைகளையும் தாண்டி போலீசில் புகார் தரும் அளவுக்கு சென்றுள்ள உள்ள திண்டுக்கல்லாரின் இன்றைய செயல்பாடு இன்னமும் பரபரப்பை ஏற்படுத்தியபடியே உள்ளது!