"நீ எப்பேர்பட்ட கொம்பனாவது இரு".. சீமானை போலவே.. ராஜீவ் நினைவிடத்தில் பேசி சிக்கிய துரைமுருகன்!
சர்ச்சை வீடியோ பதிவிட்ட நாம் தமிழர் பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: சீமானை போலவே.. அப்படியே... அதே மாதிரி.. வசனம் பேசி நடித்து சர்ச்சைக்குரிய டிக்டாக் வீடியோ போட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது புகார் எழுந்துள்ளது.
Recommended Video
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் மரணத்தை நியாயப்படுத்தி பேசியிருந்தார்.
"ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்றார். இந்த பேச்சு சர்ச்சையாக வெடித்தது.. காங்கிரஸ் கட்சியினர் இதை கண்டிக்கவும் கண்டித்தனர்.
சீமான்
போலீஸ் ஸ்டேஷனில் சீமான் மீது புகாரும் அளித்தனர்... அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.. ஆனால் சீமான் கைது செய்யப்படவில்லை.. அது மட்டுமில்லாமல், தன்னுடைய கருத்திலிருந்து பின் வாங்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
துரைமுருகன்
சீமான் அன்று பேசிய பேச்சைதான் இன்று அவரது தம்பிகளில் ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார்... அப்போது ராஜீவ்காந்தி நினைவு தூண் முன்பு நின்று கொண்டு ஒரு வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் சீமானின் கம்பீர குரல் கேட்க முடிகிறது.
ராஜீவ் காந்தி
துரைமுருகனும் சீமானை போலவே முகபாவனைகள், கையசைவுகளை காட்டி வீராவேசமாக பேசுவது போல நடித்துள்ளார். "பிரபாகரனின் பிள்ளைகள்-ன்னு நாங்கதான்டா சொல்லுவோம்.. நாங்கதான் சொல்லுவோம்.. எங்க இனத்திற்கு ஒரு பெருமை இருக்கு.. நீ எப்பேர்பட்ட கொம்பனாவது இரு.. எந்த நாட்டின் அதிபனாவது இரு.. என் இனத்தை தொட்டால் அவர்களுக்குத் தூக்குதான்'" என்று பேசியபடியே பின்புறமுள்ள ராஜீவ் காந்தியின் கல்வெட்டை கை நீட்டி சுட்டி காட்டுகிறார்.
புகார்
இந்த வீடியோவை சோஷியில் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.. இப்போது அந்த சர்ச்சைக்குரிய வீடியோதான் வைரலாகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் ஸ்டேஷனில் சம்பந்தப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென புகார் மனு அளித்துள்ளனர்.