திமுக கூட்டணியிலிருந்து காங். விலகுகிறதா.. போலி அறிக்கையால் பரபரப்பு.. டிஜிபியிடம் புகார்!
கூட்டணியில் இருந்து விலகல் என்ற போலி தகவல் குறித்து காங். புகார் அளித்துள்ளது
Recommended Video
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக வெளிவந்த போலி அறிக்கை குறித்து டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜகவுக்கு எதிராக, 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில், 2 தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று தெரியவந்தது. இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்து, 3-வது அணி குறித்து மும்முரமாக பேசி வருகிறார்கள்.
லெட்டர் பேடு
இந்நிலையில், மே 23ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக கேஎஸ் அழகிரி பெயரில் ஒரு அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கை சோஷியல் மீடியாவில் வைரலாகவும் பரவியது. இதற்கு காரணம், அந்த அறிக்கை தமிழக காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அச்சிடப்பட்டு இருந்ததுதான்.
டிடிவி தினகரன்
அந்த அறிக்கையில், "தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கு ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவுடனும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்து முயற்சி செய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
|
அறிக்கை வைரல்
இப்படி ஒரு அறிக்கை வைரலானதும், உடனடியாக தமிழக காங்கிரஸ் தரப்பில் மறுப்பு வெளியானது. போலியான அறிக்கை, ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருவதால், அதை யாரும் நம்ப வேண்டாம் என்று ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
குழப்பம்
இப்போது இது சம்பந்தமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற மோசடி அறிக்கை பரவ விடப்பட்டுள்ளது. இந்த போலி தகவலால் மோசமான விளைவுகள் நிகழ்வதற்கு முன், போலி அறிக்கையை பரப்பியதன் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.