தமிழகம்: முழு வீச்சில் லாக்டவுன் - பிரதான சாலைகள் அத்தனையும் வெறிச்- தடையை மீறினால் கடும் நடவடிக்கை
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தனை மாவட்டங்களிலும் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன.
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 6-ம் கட்டமாக லாக்டவுனில் சில தளர்வையும் சில கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. அதன் படி இந்த மாதம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் சாலைகள் வெறிச்
இதனால் தஞ்சையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் லாக்டவுனை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். மருந்தகம், பால் விற்பனை நிலையம் மட்டுமே தஞ்சையில் இன்று திறந்து இருந்தன.
கடலூர் மீன்கடைகள் அகற்றம்
கடலூர் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் தவிர்த்து பிற கடைகள் மூடப்பட்டன. அனைத்து வர்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. கடலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி செயல்பட்ட மீன் கடைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்
காஞ்சி வீதிகள் நிலவரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளான காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளான காந்தி ரோடு , காமராஜர் வீதி, நெல்லுக்கார வீதி, பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனம் எதுவும் சொல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் செயல்பட்டு வந்த தெருவோர மீன் கடைகளை நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
ஈரோட்டில் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் லாக்டவுன் மிகவும் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டமின்றி அனைத்துப் பிரதான சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். லாக்டவுன் கட்டுப்பாட்டை மீறி அவசரத் தேவைகளுக்குச் செல்வோர் உடனடியாக அனுமதிக்கப்பட்டும் காரணங்களின்றி அனாவசியமாக வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன.
கர்நாடகாவுக்கான போக்குவரத்து நிறுத்தம்
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சோதனைச் சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் டிரோன் கேமராக்கள்
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் சுமார் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 சோதனைச் சாவடிகள் உட்பட நகரின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் ரோந்து மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் வருவோரை கண்காணிக்க கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் காவலர்களும், புறநகர் பகுதியில் 1,500 காவலர்களும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் டிரோன் கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.