6ஆம் வகுப்பு முதல் கணினி பாடப்பிரிவு... உயர் கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி.. துணை முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் கணிப்பொறி பாடம் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தனிப்பிரிவு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும் கணினி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று கலைவானர் அரங்கில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஒ பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டபை தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக தனது பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவர் பல்வேறு துறைகளுக்கும் தேவையான பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மாணவர்கள் நிகர சேர்க்கை
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் மாணவர்கள் நிகர சேர்க்கை விகிதம் 99.90% உயர்ந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் இடைநிற்றல் விகிதமும் 0.75% குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய சத்துணவு, இலவச பாடப் புத்தங்கள், மடிக்கணினிகள், காலணிகள், பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் இந்தத் திட்டங்கள் தொடர 2020-21ஆம் ஆண்டு 3,703.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான கட்டாய சட்டம்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய சட்டம் 2009இன் கீழ் 5,61,111 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ. 1324.28 கோடி தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு திருப்பியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா காலத்தில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகவும் 1912 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதேபோல மாணவர்கள் பயன் பெற ஏதுவாக பல தனியார் சேனல்களிலும் கல்வி பாடங்கள் ஒளிபரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்
அதேபோல 6,029 அரசுப் பள்ளிகளில் ரூ 520.13 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் கணிப்பொறி பாடம் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தனிப்பிரிவு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம்
தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் 49% உள்ளதாகக் குறிப்பிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இது தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 37 இரு பாலர் கலைக் கல்லூரிகள், மூன்று பெண்கள் கலைக் கல்லூரிகள், 21 பல்தொழில்நுட்ப கல்லூரிகள், 4 அரசு பெரியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
உயர் கல்விக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு
மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கா கலை அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதேபோல கல்லூரிகள் 2 லட்சம் மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு 2020-21 ஆண்டில் 391.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும். 2021-22ஆம் ஆண்டில் உயர் கல்விக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.