மத மோதலை தூண்டி விடுகிறார்... கமல்ஹாசன் மீது சென்னை மடிப்பாக்கம் போலீசில் புகார்
சென்னை: மத மோதலை தூண்டும் விதத்தில் பேசியதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.
கமல்ஹாசனின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்தநிலையில், இந்துக்கள் மனம் புண்படும் வகையில் கமல்ஹாசன் பேசியதாக, பாஜக மாநில துணைத்தலைவர் குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு.. கைது செய்யப்படுவாரா கமல்ஹாசன்?
முன்னதாக, அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல்துறையினர் கூறியுள்ளனர்.