திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு தீர்மானமா? சர்ச்சைக்கு சென்னை மாவட்ட காங். விளக்கம்
சென்னை: திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என சென்னை மேற்கு மாவட்ட காங். கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக ஆட்சி அமைத்தால் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி தரக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த செய்தி திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
காங். பொதுச் செயலாளர்கள், மாநில மேலிடப் பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம்..ராகுல் தளபதிகள் கை ஓங்கியது!
இதனால் கடந்த காலங்களைப் போல காங்கிரஸ் கட்சிக்கு 50, 60 தொகுதிகளை எல்லாம் இம்முறை திமுக ஒதுக்காது எனவும் கூறப்பட்டது. திமுகவின் இந்த முடிவால் அதன் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ், துணை முதல்வர் பதவி கேட்பதாக வெளியான செய்தி விவாதங்களை கிளப்பியது.
இதனையடுத்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வீரபாண்டியன் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி கோரி எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. அப்படியான வெளியான செய்தி முற்றிலும் தவறு என விளக்கம் கொடுத்துள்ளார்.