பாஜகவுக்கு திடீரென குட்பை சொன்ன ரஜினிகாந்த்- குஷியில் காங், திராவிட கட்சிகள்
Recommended Video
சென்னை: பாஜகவின் காவிசாயத்தை தமக்கு பூச முயற்சிக்கிறார்கள்; அதில் சிக்கமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியிருப்பதை திராவிட கட்சிகள், காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதைப் போல தமக்கும் பாஜகவின் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்; காவி சாயத்துக்கு திருவள்ளுவரும் சிக்கமாட்டார்; தாமும் சிக்கப் போவதில்லை என கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் பாஜகவின் முகமாக நடிகர் ரஜினிகாந்த் முன்னிறுத்தப்படுவார்; அதற்காகவே அவர் கட்சி தொடங்குகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் கருத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.
எனக்கு காவி சாயம் பூச முயற்சி.. வள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி அதிரடி
சர்ச்சை கருத்து
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போதும்கூட, சமூகவிரோதிகள்தான் அச்சம்பவத்துக்கு காரணம் என ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையானது. அத்துடன் பாஜக தலைவர்களும் ரஜினிகாந்தை சந்தித்து பேசிவருகின்றனர்.
ரஜினிக்கு மத்திய அரசு விருது
அண்மையில் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு திரைப்பட துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் அறிவித்தது. அதுவும் பாஜக பக்கம் ரஜினிகாந்தை இழுக்கும் முயற்சிதான் என்கிற கருத்துகள் முன் வைக்கப்பட்டன.
காவி சாயம் விவகாரம்
இந்நிலையில் பாஜகவில் தம்மை சேருமாறு யாரும் அழைக்கவும் இல்லை; தமக்கு பாஜகவின் காவி சாயத்தை பூச முயற்சிக்கிறார்கள்.. அதில் சிக்கமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு காங்கிரஸ், திராவிட கட்சிகள் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் வரவேற்பு
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், ரஜினிகாந்த் ஆன்மீகவாதி; மதவாதி அல்ல. அதைத்தான் இன்றைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் சிறந்த பேட்டிகளில் இது ஒன்று என புகழாரம் சூட்டியுள்ளார். திமுகவின் பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என கூறியுள்ளார்.
ரஜினிக்கு ஆதரவு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ரவிக்குமார், ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன் என்றார். இதேபோல் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் ரஜினிகாந்த் கருத்தை வரவேற்றுள்ளனர்.