பாஜக தலைவர்களுக்கு பொளேர் நோஸ்கட்- சென்னை காங். போராட்டத்தின் மூலம் பதிலடி தந்த குஷ்பு!!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்று தாம் அக்கட்சியிலேயே நீடிப்பதாக உறுதி செய்திருக்கிறார் அதன் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் நடிகை குஷ்பு. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்வுகளில் அவ்வளவாக அவர் தலைகாட்டுவதில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..!
நடிகை குஷ்பு ஆதங்கம்
காங். எம்.பி. வசந்தகுமார் படத் திறப்பு விழாவை கூட தாம் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என சமூக வலைதளங்களில் கவலையுடன் பதிவிட்டிருந்தார் குஷ்பு. மேலும் ஈகோதான் கட்சியை பலவீனப்படுத்துகிறது எனவும் ஆதங்கப்பட்டிருந்தார் குஷ்பு.
இடைவிடாத பாஜக அழைப்பு
இந்த நிலையில் நடிகை குஷ்புவை பாஜகவில் சேர்க்க அந்த கட்சித் தலைவர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டனர். ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் நடிகை குஷ்பு போன்றவர்கள் பாஜகவுக்கு வரவேண்டும் என்று இடைவிடாமல் அழைப்பு விடுத்து கொண்டே இருந்தனர்.
பதிலே தராத குஷ்பு
குஷ்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் ஏராளமானோர் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் முருகனும் கூட குஷ்பு, கட்சியில் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நடிகை குஷ்புவுக்காக இப்படி பாஜக கெஞ்சிக் கொண்டிருக்க இதற்கு அவர் தரப்பில் எந்த பதிலும் வராமல் இருந்தது.
திடீர் பதிலடி
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் இன்று அறவழிப் போராட்டம் நடத்தினர். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென குஷ்புவும் கலந்து கொண்டார். இதன் மூலம் தாம் காங்கிரஸிலேயே நீடிக்க விரும்புவதாக பாஜக தலைவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் குஷ்பு என்றே இதை எடுத்துக் கொள்ளலாம்.