10,15 தொகுதிகள்... திமுக கொடுக்குற சீட்டை வாங்கிட்டு கம்முனு போயிடுவோம்.. பம்மும் காங். சீனியர்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் கடந்த காலங்களைப் போல அடம்பிடிக்காமல் திமுக தர முன்வருகிற தொகுதிகளைப் பெற்று அதில் வெற்றி பெற வேண்டிய வேலைகளை மட்டும் பார்ப்போம் என்கிற புதிய முடிவுக்கு வந்துள்ளனராம் தமிழக காங்கிரஸ் சீனியர் தலைவர்கள்.
சட்டசபை தேர்தலில் திமுக 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதில் என்பது உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும் கூட ஆகக் குறைந்தபட்சம் 180 தொகுதிகளிலாவது திமுக போட்டியிடும்.
திமுக நிலை திட்டவட்டம்
இதனால் கடந்த தேர்தல்களைப் போல கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தாரளமாக திமுக வழங்காது என்பது திட்டவட்டம். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை திமுக தூக்கிக் கொடுக்காது என்பதும் தெளிவாகி இருக்கிறது.
காங். சீனியர்கள் ஆலோசனை
திமுகவிடம் 60 தொகுதிகள் வரை கேட்டு அடம்பிடித்து போதிய இடங்கள் தரவில்லை என சொல்லி புதிய கூட்டணிக்கு போவதா? அல்லது பேசாமல் திமுக தரும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடலாமா? என காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் விவாதித்திருக்கின்றனர். இந்த ஆலோசனைகளில் திமுக சொற்ப எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கினால் அதில் எப்படியும் பெரும்பாலான இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது. திமுகவும் ஒத்துழைப்பும் கொடுக்கும். இதைத்தான் திமுகவுமே விரும்புகிறது.
திமுக தரும் தொகுதிகள் போதும்
இதனால் பேசாமல் திமுக ஒதுக்கும் 10 அல்லது 15 தொகுதிகளை மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடலாமே என ஒருமுடிவுக்கு வந்திருக்கின்றனராம். சீனியர் தலைவர்கள் இப்படி முடிவுக்கு வந்ததில் இன்னொரு உள்விஷயமும் இருக்கிறதாம். திமுகவிடம் தங்களது வாரிசுகளுக்கான தொகுதிகளை மட்டும் வாங்கிக் கொண்டு அதில் ஜெயிக்கிற வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்பதுதான் இந்த சீனியர்களின் சீக்ரெட் அஜெண்டாவாம். ஆதரவாளர்களுக்கு இம்முறை சீட் கேட்கப் போய் கூட்டணியே முறிந்து போவதை இந்த சீனியர்கள் விரும்பவும் இல்லையாம்.
தினேஷ் குண்டுராவுடன் ஆலோசனை
இதையே அண்மையில் சென்னை வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடமும் கூறியிருக்கின்றனர் இந்த சீனியர்கள். இருந்தபோதும் ஆதரவாளர்களுக்கும் சீட் வாங்கி தருவதாக பேரம் பேசுகிற அந்த கெத்து போய்விடும் என ஒருசில சீனியர்கள் குமுறுகின்றனராம். அவர்கள், தினேஷ் குண்டுராவிடம் அப்படி எல்லாம் பணிந்து போகக் கூடாது; 60 சீட்- ஆட்சியில் பங்கு என்கிற ரேஞ்சில் பேசுமாறும் தூண்டில் போட்டிருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மை சீனியர்களின் கருத்து கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடலாம் என்பதால் அதையே ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
ஆகவே நடுத்தெருவில் காங். சீனியர்களின் ஆதரவாளர்கள்!