உ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா? புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் வியூகப்படியே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெறும் கட்சியே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொண்டிருக்கின்றன என்பது வரலாறு. உத்தரப்பிரதேசத்தில் கன்சிராம், முலாயம்சிங் எழுச்சிகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கதை முடிவுக்கு வந்துவிட்டது.
காலப்போக்கில் இந்த கட்சிகள் பேசிய சமூக நீதி கொள்கை மாயமாகிப் போனது. கொள்கை சமரசங்கள் தொடர்ந்ததால் பாஜகவின் காவி கொடி உத்தரப்பிரதேசத்தில் கோலோச்சிப் பறப்பதை தடுக்க முடியவில்லை. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் இவைதான் இப்போது உ.பி.யின் பிரதான அரசியல் கட்சிகள்.
கர்நாடகாவை தொடர்ந்து உ.பி.யிலும் காங்கிரஸ் அதிரடி.. அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைப்பு
அமேதியில் அதிர்ச்சி தோல்வி
காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசத்தில் இனி இடமே இல்லை என்பதை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தழுவிய தோல்விதான் சொல்கிறது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரையே பெரும் அதிர்ச்சியில் ஆளாக்கியதுதான் அமேதி தோல்வி.
காங். புதிய தலைவர்
அதனால்தான் காங்கிரஸ் தலைவர் பதவியில் தாம் நீடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் ராகுல். அவரது பிடிவாதம் தொடர்ந்து நீடிப்பதால் புதிய தலைவர் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட கமிட்டிகள் கலைப்பு
இந்நிலையில்தான் அதிரடியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் பொதுச்செயலாளர்களான பிரியங்கா காந்தி, ஜோதிராதித்யா சிந்தியா பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த அதிரடி அரங்கேறுகிறதாம்.
இளைஞர்கள், பெண்கள்
புதியதாக நியமிக்கப்படும் மாவட்ட கமிட்டிகளில் இளைஞர்கள், பெண்களுக்கு சம அளவிலான முக்கியத்துவம் இருக்குமாம். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சாமல் போனால் சூனியம்தான் தொடரும் என்பதை உணர்ந்தே பிரியங்கா இந்த அதிரடி முடிவுக்கு வந்தாராம். அவரது வியூகமாவது கை கொடுக்குமா?