களைகட்டும் தேர்தல் களம்.. சென்னையில் திமுக-காங். தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் பேச்சுவார்த்தை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்த்தது.
ஆனால் இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான எண்ணிக்கையில்தான் தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக தீவிரமாக உள்ளது. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் நாளை மறுநாள் சென்னையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே திமுகவிடம் தொகுதிகளுக்காக அடம்பிடிக்க மாட்டோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியிருந்தார். இதேபோக்கை காங்கிரஸ் தொடர்ந்து கடைபிடிக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.