கராத்தேவுக்கு ஒரு நீதி... கே.என்.நேருவுக்கு ஒரு நீதியா? திமுக- காங். கூட்டணியில் விரிசல்
சென்னை: கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதற்காக கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்தது போல பொதுக்கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வலியுறுத்தினார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை இனியும் திமுக தூக்கி சுமக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஒரே காரணத்துக்காக கராத்தே மீது நடவடிக்கை எடுத்தது சரி எனில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை விமர்சித்த கே.என்.நேரு மீது ஏன் நடவடிக்கை எடுகக் கட்சி அழுத்தம் தரவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவாம்.
ஏற்கனவே மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் தர திமுக மறுத்திருக்கிறது. இதனால் டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. தற்போது கராத்தே விவகாரத்தில் திமுகவுக்கு அழுத்தம் தரலாமா? இல்லையா? என்பது குறித்து மேலிடத்தில் ஆலோசனை நடைபெறுகிறதாம்.