அன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா.. துரைமுருகனுக்கு காங் கேள்வி
சென்னை: அன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த போது மட்டும் எங்கள் தயவு தேவைப்பட்டதா என துரைமுருகனுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரக உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இதனால் மறைமுக தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் திமுகவை காட்டிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இணைந்த கரங்கள்
இந்த நிலையில் கே எஸ் அழகிரி நேற்று முன் தினம் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது திமுகவும் காங்கிரஸும் எப்போதும் இணைந்த கரங்கள் என்றார்.
நெருப்பில் எண்ணெய்
திமுக பொருளாளர் வேலூரில் பேசுகையில் காங்கிரஸ் விலகி போனால் போகட்டும். எங்களுக்கு நஷ்டம் இல்லை என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.
ஞாபக சக்தி
இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை என துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து மோகன் குமாரமங்கலம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில் காட்பாடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.துரைமுருகன் அவர்கள் காங்கிரஸ் பற்றி பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி போனால் எங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று திரு.துரைமுருகன் கூறினார். குறிப்பாக எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். துரை முருகன் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஆகிவிட்டது என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பதவியை காப்பாற்ற
2006-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழிநடத்தினோம். அந்த ஆட்சியில் திரு.துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக தேவைப்பட்டது என்பதை அவர் மறந்து விடக்கூடாது.
மறக்கக் கூடாது
2011-ல் உங்களுடைய கூட்டணியில் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் கூட அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் அழைப்பை புறக்கணித்தோம். கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டோம். அன்றைக்கு உங்களுக்கும் காங்கிரஸ் தேவைப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
கூட்டணி
2019 வேலூர் இடைத்தேர்தலில் உங்கள் மகன் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் பங்கில்லை என்று நினைக்கிறீர்களா? திரு.துரைமுருகன் என்னைவிட வயதில், அனுபவத்தில் பெரியவர். ஆக அவருக்கு நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. வேண்டுகோள் மட்டுமே அவரிடம் வைக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மட்டுமல்ல உங்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேசாதீர்கள் என கூறி உள்ளார் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.