சமாதானம்... சமாதானம்... திமுகவை சமாதானம் செய்த காங்கிரஸ் தூதுவர்கள்
சென்னை: காங்கிரஸ் -திமுக இடையேயான கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் திமுகவிடம் 3 சமாதான தூதுவர்கள் பேசியுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் ஆகிய மூவரும் நேரடியாக ஸ்டாலினிடம் பேசி அவரை சமாதானம் செய்திருக்கின்றனர்.
இது தெரியாமல் மோகன் குமாரமங்கலம், மாணிக்கம் தாகூர் போன்றோர் சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சித்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
பிரளயம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை திமுக காங்கிரஸ் கூட்டணியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. கூட்டணி முறியும் அளவுக்கு சென்றுவிட்ட நிலையில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் மூன்று பேர் திமுக தலைமையுடன் பேசி தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கின்றனர்.
திமுக ஆதரவு
காங்கிரஸில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டுடன் இருப்பார்கள். சிலர் அதிமுக, சிலர் திமுக, என்ற ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பார்கள். அந்தவகையில் கருணாநிதி காலம் தொட்டே திமுக மீது நெருக்கம் காட்டும் காங்கிரஸ் தலைவர்களில் நாராயணசாமி, பீட்டர் அல்போன்ஸ், கே.வி.தங்கபாலு போன்றோர் முதன்மையானவர்கள்.
நேரடியாக பேச்சு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிக்கையில் இடம்பெற்ற சில வார்த்தைகளில் தங்களுக்கே உடன்பாடில்லை என்றும், அறிக்கையை தயார் செய்த கோபண்ணா கடுமையான வார்த்தைகளை உட்புகுத்திவிட்டார் எனவும் அந்த மூவரும் ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கின்றனர்.
கண்டிப்பு
கே.எஸ்.அழகிரி அறிக்கை தொடர்பாக அவரை அழைத்து சோனியாகாந்தி கண்டித்துவிட்டதால், இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடுமாறும் காங்கிரஸ் சமாதான தூதுவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்தே அண்ணா அறிவாலயத்தில் அழகிரி தன்னை சந்திக்க நேரம் கொடுத்தாராம் ஸ்டாலின்.