தமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்.. கமல்ஹாசன் கட்சியுடன் காங்கிரஸ் போடும் திட்டம்
சென்னை: தமிழக அரசியல் பல திடுக்கிடும் திருப்பங்கள் சாட்சியாக போவது என்னவோ உறுதியாகிவிட்டது. அதற்கான விதை, மக்கள் நீதி மய்யம் கட்சியால் போடப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சியும் இந்த அரசியல் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தோர்.
அரசியலின் திருப்பத்தை திருச்சி எழுதி வைத்துள்ளது. திருச்சியில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க சென்றிருந்தார் அந்த கட்சி தலைவர் கமல்ஹாசன். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.
கோபம் அடைந்த ஸ்டாலின்.. போன் செய்து பேசிய மூத்த தலைகள்.. ஒரே இரவில் மனம் மாறிய கே எஸ் அழகிரி!
அழகிரி அறிக்கை
தனது வழக்கமான பாணியில் கமல்ஹாசன் லாவகமாக இவற்றுக்கு பதில் சொன்னார். அதில் முக்கியமாக கவனிக்கப்பட்ட ஒரு கருத்து என்பது, "திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை. இதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. 2021ல் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டதற்கு காரணம். இந்த பேட்டி வெளியாகி சில மணி நேரம் கழித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி வெளியிட்ட ஒரு காட்டமான அறிக்கை.
கூட்டணி தர்மம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ்-திமுக ஆகிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், ஓரணியில் போட்டியிட்டன. இந்த நிலையில்தான், அழகிரி தனது அறிக்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், மறைமுக தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டில், கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது." என்று அழகிரி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆலோசனை
கே.எஸ்.அழகிரி, மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கக் கூடியவர். எனவே அவர் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஒரு முக்கியமான கட்சி பற்றி இப்படி ஒரு பரபரப்பான அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக, தன்னிச்சையாக இந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது. கண்டிப்பாக, டெல்லி மேலிடத்திடம் கலந்து பேசி விட்டுத்தான் அறிக்கையை அனுப்பியிருப்பார். தற்போதைய டெல்லி மேலிடம் என்பது, அந்த கட்சியின் தற்காலிக தலைவரான சோனியா காந்தி என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
காங்கிரஸ்
ஒருபக்கம் திராவிட கட்சிகள் அல்லாத கட்சிகளுடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது கூட்டணி அமைக்கப்படும் என்கிறார் கமல்ஹாசன். அப்படியான கட்சி என்று பார்த்தால் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவைதான் உள்ளன. இதில் பாஜகவுடன், ம.நீ.ம கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பது குழந்தைக்கும் தெரியும். ஏனெனில் கொள்கை அளவில் இரண்டு கட்சிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அடிக்கடி கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
சந்திப்பு
அப்படிப் பார்த்தால், திராவிட கட்சிகளை தாண்டி பெரிய கட்சி என்ற என்ற அந்தஸ்தில் உள்ளது காங்கிரஸ்தான். காங்கிரசும் மக்கள் நீதி மய்யமும், கூட்டணி கூட்டணி அமைக்கும் என்பது இப்போதைய பேச்சு கிடையாது. சுமார் இரண்டு வருடங்களாகவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. டெல்லிக்கு கமல்ஹாசன் ஒருமுறை சென்றபோது, காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது இந்த யூகங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருந்தது.
எதிர்பார்ப்பு
ஆனால் கமல்ஹாசன் கட்சியை காட்டிக் காட்டியே திமுகவை, மிரட்டி லோக்சபா தேர்தலில் பத்து தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக்கொண்டது என்ற ஒரு விமர்சனமும் திமுக கீழ்மட்ட தலைவர்களிடம் இருக்கிறது. திமுகவின் இளம் தலைவர்கள் காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியும் என்பதால் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தாராளமாக, சீட்டுகளை ஒதுக்கி விடாதீர்கள் என்று தலைமைக்கு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகளை, கமல்ஹாசன் பேட்டி.., அழகிரியின் அறிக்கை.. ஆகியவை, அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.