"கை" கொடுத்த காங்கிரஸுக்கே ஆப்பு? அமைச்சரவையில் அந்த 8 பேர் யார் தெரியுமா? தமிழக அரசியலில் வேற லெவல்
சென்னை: தமிழக அரசியலின் அதிகாரப் பகிர்வில் விசித்திரமான டர்னிங் பாயிண்ட் ஒன்று நடந்துள்ளது.. , தேர்தல் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்திய தவெக-வின் 8 முக்கியத் தலைவர்களுக்கு, அதே காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற அமைச்சரவையில் முதல்வர் விஜய் அமைச்சர் பதவி வழங்கி உள்ளதுதான் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.. அதாவது இதுவரை நிலவிவந்த மொத்த அரசியல் வியூகத்தையே விஜய் மாற்றியுள்ளாராம்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வியக்கத்தக்க மற்றும் பரபரப்பான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.

காங்கிரஸ் கட்சி
இந்த வெற்றியை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை உறுதி செய்ய, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்தது தவெக. திமுக கூட்டணியில் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, சோர்வடைந்திருந்தது காங்கிரஸ் கட்சி..
பிறகு தவெகவின் அழைப்பை ஏற்று, மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதையும் கடந்து, எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவுக்கரம் நீட்டியது மட்டுமல்லாமல், வரும் காலங்களில் தவெக-வுடன் இணைந்து செயல்படப்போவதாகவும் அறிவித்தது. இந்த அரசியல் நகர்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
தோற்கடித்தவர்களுக்கு பதவி
இந்தச் சூழலில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 8 அமைச்சர்களின் பின்னணி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது கசிந்துள்ளது.
இந்த 8 அமைச்சர்களும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடித்துப் பெரு வெற்றி பெற்றவர்கள் என்பதுதான் அந்த ஆச்சரியமான தகவலாகும்..
அரசியல் முரண்பாடுகள் உச்சத்தில் இருந்த தேர்தல்களத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் துவம்சம் செய்தவர்களுக்கே, இன்று அதே காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்த அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை முதல்வர் விஜய் வழங்கியுள்ளது, தமிழக அரசியலின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
8 பேருக்கு அமைச்சர் பதவி
இந்த வரிசையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர் விஜய் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை 23,966 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். அதேபோல, அமைச்சர் ஆர்.குமார் போட்டியிட்ட தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
திருவாடனை தொகுதியில் அமைச்சர் ராஜீவ், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எம். கருமாணிக்கத்தை 2,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடலூர் தொகுதியில் அமைச்சர் ராஜ்குமார், காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகரனை 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தனது செல்வாக்கை நிலைநாட்டினார்.
விஜய் வேற லெவல் அரசியல்
காரைக்குடி தொகுதியில் அமைச்சர் டி.கே.பிரபு, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை 46,074 வாக்குகள் என்ற பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல, அறந்தாங்கி தொகுதியில் அமைச்சர் முகமது பர்வேஸ், டி.ராமச்சந்திரனை 10,062 வாக்குகள் வித்தியாசத்திலும், சிவகாசி தொகுதியில் அமைச்சர் கீர்த்தனா, காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தனர்.
இவர்களுக்கெல்லாம் டாப்பில் உள்ளது, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை, அமைச்சர் தென்னரசு 54,246 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மிகப்பெரும் அரசியல் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.
விசித்திரமான தேர்தல்
இப்படித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகளைத் தவிடுபொடியாக்கிக் களம் கண்ட தவெக-வின் முன்னணி வீரர்களுக்கு, தற்போது அதே காங்கிரஸ் ஆதரவு பெற்ற அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவிகளை வழங்கி முதல்வர் விஜய் அழகு பார்த்துள்ளார்.
இப்படியொரு விசித்திரமான அரசியல் கூட்டணி, அதிகார பகிர்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் தற்போதைய முக்கிய விவாதமாக உள்ளது.
இருந்தாலும் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளது, கூட்டணிக்குள் நிலவும் சமரசப் போக்கையும், அதிகார அரசியலின் நுணுக்கமான நகர்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எது எப்படியோ, இந்த எட்டு அமைச்சர்களின் வெற்றி மற்றும் பதவி உயர்வு என்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய ட்விஸ்ட்டாக பதியப்பட்டுள்ளது. இந்த நிலை மாறுமா? அல்லது தொடருமா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications