10 கோடி தமிழ் மக்களுக்கும் இழப்பு.. அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் அழகிரி இரங்கல்
சென்னை: திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இது குறித்து அழகிரி கூறியதாவது: அவரைப் போன்ற ஒரு தலைவரை நம்முடைய காலத்தில் பெற்றது அரிதினும் அரிதாகும். அவருடைய மறைவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் அதனுடைய தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
பேராசிரியர் அவர்களை பொதுச்செயலாளராக மட்டுமல்ல, தன்னுடைய சொந்த பெரியப்பாவாக கருதியவர், ஸ்டாலின். அந்த அளவிற்கு குடும்ப உறவு அவர்களிடையே இருந்தது. எனவே திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேராசிரியர் என்னுடைய சொந்த மாவட்டத்திற்கு எப்போது வந்தாலும், என்னுடைய தந்தையார் சம்பந்தம் அவர்களை தவறாமல் விசாரிக்க கூடியவர். அவருடைய இளமைகால நண்பர்களை ஒருபோதும் மறவாதவர். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கூட, நண்பர்களுடைய பெயரை குறிப்பிட்டு. அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவருடைய குடும்பத்தார் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்க கூடிய ஆற்றல் படைத்தவர்.
இன்றைக்கு அவரை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் இழந்திருக்கவில்லை. 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் கூறும் நல்லுலகம் இழந்திருக்கிறது. எங்களைப்போன்ற தோழமைக் கட்சிகளும், அவர் மீது அளப்பரிய பற்று உடையவர்களும், அவரை இழந்து வாடும் தமிழ் சமூகத்திற்கும், அவரை இழந்து துயரத்தில் வாடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதனுடைய கோடான கோடி தொண்டர்களுக்கும், அதனுடைய தலைமைக்கும், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.