எல்லோரும் ஃபிராடுகள்! மோடி ஆட்சியில் 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்! கொதிக்கும் காங்கிரஸ்!
சென்னை: பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் வங்கிக்கடன் கட்டாமல் 23 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேபோல் 4 ஆண்டுகளில் 3,400 வகுப்புவாதக் கலவரங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் வேதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது.. மோடி, ஷாக்களுடையது அல்ல -மும்பையில் முழங்கிய ஒவைசி
23 பேர் தப்பியோட்டம்
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30 ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். மோடி ஆட்சியில் 53 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கிகளை ஏமாற்றிவிட்டு 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இவர்களில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
வேலை இழப்பு
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் 7.9 சதவிகிதமாக சரிந்துவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மைய அறிக்கையின்படி, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கையின்படி, கிராமப்புறத்தில் 57 சதவிகிதமும், நகர்ப்புறத்தில் 80 சதவிகிதத் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
வறுமையும் பஞ்சமும்
பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்றால், எத்தனை ஆண்டு காலம் ஆகும் என்பதை பிரதமர் மோடிதான் விளக்க வேண்டும். மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் எண்ணிலடங்காத துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டு மக்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது, குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து பல மடங்கு கூடியிருக்கிறது.
கார்ப்பரேட் கட்சி
கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாவலனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் 142 தொழிலதிபர்களின் சொத்து 23 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த 2 ஆண்டுகளில் ரூபாய் 53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பா.ஜ.க. ஒரு கார்ப்பரேட் ஆதரவு கட்சி என்று கூறுவதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் பா.ஜ.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் 2014இல் ரூபாய் 400, தற்போது ரூபாய் 1015.50 ஆக விற்கப்படுகிறது. இவையெல்லாம் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கைகளாகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டின் காரணமாக பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆண்டுக்கு ஆண்டு நன்கொடை என்ற போர்வையில் சட்டப்பூர்வமாகவே நிதி குவிந்து வருகிறது.
3,400 கலவரங்கள்
தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி குவித்து வருவதால் தேர்தல் களம் சமநிலையற்றத் தன்மையாகவே இருந்து வருகிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்வரவில்லை. ஏனெனில், அனைத்து அரசமைப்பு சட்ட நிறுவனங்களும் பா.ஜ.க.வின் கைப்பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் 3400 வகுப்புக் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த நாடு முழுவதும் வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ். விளம்பரமில்லாமல் செயல்பட்டு வருகிறது.
பாடம் புகட்டுவார்கள்
மதவாத வெறுப்பு பேச்சுகளின் மூலமாக மக்களைப் பிளவுபடுத்துகிற பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க பா.ஜ.க., எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது. தேர்தல் வரும் போது மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.