ஒரு மாவட்ட தலைவரும் மதிப்பதில்லை.. எதையும் பொருட்படுத்துவதில்லை.. அழகிரிக்கு வந்த சோதனை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகள் என எதையும் செயல்படுத்தாமல் பெரும்பாலான நிர்வாகிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காத நிர்வாகிகள் சிலர், கட்சிப்பணிக்கு மட்டும் நாங்கள் வேண்டும் ஆனால் சீட் மட்டும் பணம் இருக்கும் நபர்களை தேடிச்சென்று கொடுப்பீர்கள் என அழகிரியிடம் ஆதங்கப்பட்டுள்ளார்கள். அவர்களை அழகிரி தரப்பில் சமாதானம் செய்யப்பட்டு உரிய நேரத்தில் தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு வரும் என உறுதியளிக்கப்பட்டதாம். மேலும், பல மாவட்டங்களில் திமுக முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் கூட காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் கலந்துகொள்வதில்லையாம்.
இது தொடர்பான புகார் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றதை அடுத்து, மாவட்ட தலைவர்களை தொடர்பு கொண்ட அழகிரி தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கங்களில் நமது சார்பில் யாராவது கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதனை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். பதிலுக்கு சரி என்பதோடு முடித்துக்கொள்ளும் மாவட்ட தலைவர்கள், சொல்லிக்கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கத்திற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரையும் அனுப்பி வைப்பதில்லையாம். இப்போது தான் திமுக காங்கிரஸ் லடாய் முடிந்து நிலைமை ஓரளவு சுமூகமான நிலையில் மீண்டும் லேசாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோஷ்டிப்பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை நினைத்து அழகிரி வேதனைப்பட்டுள்ளார். கடந்தவாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் காங்கிரஸ் நிர்வாகி சபீன் என்பவர் கோஷ்டிப்பூசல் காரணமாக மண்டை உடைபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை செய்யாமலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவையில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஆதரவாளர்கள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.
ஐடி ரெய்டு... இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது : கே.எஸ் . அழகிரி
திருச்சியில் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் மேயர் சுஜாதா, அடைக்கலராஜ் மகன் லூர்து என பல கோஷ்டிகள் காங்கிரஸில் உள்ளன. தனது பதவிக்காலத்தில் இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை பெற்றுத்தருவாரா கே.எஸ்.அழகிரி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.