ராகுல்காந்தி விரைவில் சென்னை வருகிறார்... பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இம்மாத இறுதியில் சென்னை வரவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முகாம் சற்று சுறுசுறுப்பு அடைந்து வருகிறது. இப்போதே தேர்தல் பணிகளை தொடங்குவது பற்றி ஆலோசித்து வருகிறது. மேலும், கூட்டணிக் கட்சிக்கு தலைமை தாங்கும் திமுகவிடம் இருந்து இந்த முறை கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.சீட்களை பெற திட்டமிடுகிறது. இதனிடையே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிப் பாதை எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் அது தனிக்கதை.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒரு அயர்வு தெரிவதால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுலை தமிழகம் அழைத்து வருகிறார் கே.எஸ்.அழகிரி. இதற்காக கடந்த மூன்று மாதங்களாக முயற்சித்து எப்படியோ ஒரு வழியாக ராகுலின் தமிழக பயணத்திட்டத்தை உறுதிப்படுத்திவிட்டார் கே.எஸ்.அழகிரி. இம்மாத இறுதியில் தமிழகம் வரும் ராகுல் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
கட்சி தொடங்குவாரோ இல்லையோ? அசால்ட் மா.செ.க்களால் அப்செட் ஆன ரஜினி- பின்னணி இதுதானாம்!
மேலும், சென்னையில் காங்கிரஸ் ஏற்பாட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு ஸ்டாலினையும் அழைத்து காங்கிரஸின் பலத்த உணர்த்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களின் திட்டம். இதற்காக இடம் தேர்வு, அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ராகுல் தமிழகம் வரும்போது திமுக தலைமையிடம் பேச வேண்டிய விவகாரங்களை அவர் காதில் போடவும் இங்குள்ள தலைவர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே சென்னையை தவிர்த்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய மூன்று ஊர்களில் ஏதேனும் ஒரு ஊரில் பொதுக்கூட்டம் நடத்தலாமா என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி யோசித்து வருகிறது. மாணிக்கம் தாகூர் மதுரையில் நடத்துமாறு வலியுறுத்தி வரும் நிலையில், மயூரா ஜெயக்குமார் கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என விருப்பப்படுகிறார்.