காங்கிரஸ் கட்சிக்கு 2009ல் 15 சீட்.. இந்த வாட்டி 10.. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா லாபம்தான்!
சென்னை: திமுக கூட்டணியில் கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு அப்போது மறைந்த தலைவர் கருணாநிதி 15 தொகுதிகளை ஒதுக்கினார். இந்த முறை அதிலிருந்து 5 தொகுதிகள் குறைந்து 10 தொகுதிகளை மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதில் திமுக 22, காங்கிரஸ் 15 மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டன.
திமுக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் வென்றது. சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்றார்.
2014 தேர்தலில் காங்கிரஸை திமுக கூட்டணியில் சேர்க்கவில்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்று 2 தொகுதிகளில் போட்டியிட்டது. இதுதவிர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 1, மனித நேய மக்கள் கட்சி 1, புதிய தமிழகம் 1 போட்டியிட்டன. திமுக 34 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைவரும் தோல்வியைத் தழுவினர்.
இந்த முறை காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக கூட்டணியில் சேர்ந்தது. அக்கட்சி ஆரம்பத்தில்15 தொகுதிகளைக் கேட்டது. பின்னர் 12 என இறங்கி வந்தது. ஆனால் திமுக சிங்கிள் டிஜிட்டிலேயே நின்றிருந்தது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட் கொடுக்கப்பட்டதைப் பார்த்ததும் ஏறி வந்து காங்கிரஸுக்கு 10 சீட் ஒதுக்க முன் வந்தது. அதேபோல தற்போது தொகுதிகள் கொடுக்கப்பட்டன.
ஆக, கடந்த 2009 தேர்தலைக் காட்டிலும் மொத்தமாக 5 தொகுதிகள் குறைந்தே காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள்தான். அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி.