திமுக, காங். கூட்டணியை நாடே எதிர்பார்க்கிறது.. 100% வெற்றி உறுதி என வேணுகோபால் பேட்டி
சென்னை:தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணி இறுதி வடிவத்தை பெற்றுள்ளன. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதியாகி விட்டது.
அதேபோன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியும் உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்னையில் இந்த இரு கட்சிகளும் கலந்து பேசி கூட்டணியை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளன.
அதற்காக சென்னை அறிவாலயத்தில் காங்கிரசின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் திமுகவுடன் பேச்சு நடத்தினர்.
திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் துரை முருகன், டிஆர் பாலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, உடன்பாடு கையெழுத்தானது.
அதன்பிறகு ஸ்டாலின், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.
அதனை தொடர்ந்து கே.சி. வேணுகோபால் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுவதும் மத்தியில் ஆண்டு வரும் பாஜக தலைமையிலான அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அது போன்றதொரு கோபம் தமிழகத்திலும் அதிகளவு உள்ளது. எனவே.. திமுக, காங்கிரஸ் கூட்டணியை நாடே எதிர்பார்க்கிறது. இது மிகப்பெரிய கூட்டணி. இந்த கூட்டணி நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெறும்.
10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து.. இரு கட்சி தலைவர்க்ளும் கல்ந்து பேசி பின்னர் அறிவிப்பார்கள் என்று கூறினார்.