சக்சஸ்.. முட்டி மோதி கவுரவத்தை காக்க.. கே எஸ் அழகிரியின் செம மாஸ்டர் மூவ்! சோனியா ஹேப்பி!
சென்னை: திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக கூட்டணியில் பாஜக பெற்ற சீட்டுகளைவிட அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அது போல் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் இரு நாட்கள் நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாஜகவுக்கு 20 சீட்டுகளையும் குமரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவு ஒப்பந்தத்தையும் பெற்றது. அது போல் திமுகவிலும் காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் 30 தொகுதிகளை கேட்டது.
பொறுப்பு
ஆனால் திமுகவோ 18 வரை தருகிறோம் என சொல்லி வந்தது. பொதுவாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இது போன்ற இழுபறி நீடித்தால் கட்சி தலைமை கூட்டணி தலைமையை அழைத்து பேசும். ஆனால் இந்த முறை ராகுலும் சோனியாவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கும் பொறுப்பை வழங்கிவிட்டார்.
அதிமுக கூட்டணி
முட்டி மோதும் நீங்களே பேசுங்கள் என்று தெரிவித்துவிட்டனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையாவது கூடுதலாக பெற்று விட வேண்டும் என எண்ணினர். அதன்படி இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி
இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் கன்னியாகுமரி எம்பி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்று திமுக தெரிவித்துவிட்டது. 30 இடங்கள் கேட்டு 18 கொடுப்பதாக கூறி மீண்டும் 25 இடங்கள் கிடைத்துவிட்டதே என்று காங்கிரஸ் ஒரு வகையில் சந்தோஷப்படுகிறது.
இந்த சம்பவத்தில் முக்கியமாக கே எஸ் அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோரின் பணிகளை பாராட்டியே ஆக வேண்டும். கவுரவமான தொகுதிகள் கிடைக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இன்று பாஜகவை தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து விட்டனர் அழகிரியும் குண்டுராவும்! இவர்களின் இந்த டீலிங்கால் காங்கிரஸ் தலைமை செம ஹேப்பியாமே!