அன்று இந்திரா முன் பேசிய அதே வசனம்.. இன்று மோடி முன் ஒலித்தது! ஸ்டாலின் மீது காங்கிரஸ் கோபம்?
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியது காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ 31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழக திட்டங்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக திட்டங்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அதுவே உண்மையான கூட்டாட்சியாக அமையும் என்றார்.
பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் உரிமைக் குரல் பாஜகவை கதிகலங்கவைத்துள்ளது- குவியும் பாராட்டுகள்!
பிரதமர் மோடி
பிரதமர் மோடி இதுவரை எத்தனையோ மாநிலங்களில் விழாக்களில் பேசியுள்ளார். இதுவரை எந்த முதல்வரும் விழா மேடையில் கோரிக்கை வைத்ததில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ கோரிக்கைகளை வைத்ததும் இல்லாமல் திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து வகுப்பெடுத்துள்ளார்.
பாஜகவினருக்கு கோபம்
இது பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, முதல்வர் ஸ்டாலினுடைய பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பேரறிவாளன் விடுதலை, அவரை முதல்வர் ஆரத்தழுவியது, மேலும் 6 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றால் திமுக- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
மோடி விழா
இந்த நிலையில் மோடி கலந்து கொண்ட விழாவில் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த வசனத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு தருணத்தில் காங்கிரஸ் கட்சியை பார்த்து கூறியிருந்தார்.
இந்திரா காந்தி பிரதமர்
அதாவது மறைந்த இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது , மத்திய அரசுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கருணாநிதி இந்த வசனத்தை அவ்வப்போது உச்சரிப்பார். தற்போது அதே வசனத்தை ஸ்டாலின் பேசியதன் மூலம் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக ஏதேனும் முடிவை எடுக்க வாய்ப்பிருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே காங்கிரஸ் அல்லாத 3 ஆவது கூட்டணி ஏற்படுத்துவோம் என திமுக மூத்த தலைவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நேரத்தை மத்திய பாஜக அரசை ஆதரிப்பது போன்றதொரு வசனத்தை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.