அட நம்ம காங்கிரஸ்காரர்களா இப்படி...! வாக்குகளை வளைக்க புது டெக்னிக்
சென்னை: நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் புதிய உத்தியை கையாள்கின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுகவும்-காங்கிரஸும் நேரடியாக களம் காண்கின்றன. இதனால் காங்கிரஸ் நமக்கு பெரியளவு டஃப் கொடுக்காது என நினைத்த அதிமுகவுக்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அந்தளவுக்கு காங்கிரஸ் கடுமையான சவால்களை தருகிறது. இதனால் அதிமுக முகாம் சற்று பீதியில் தான் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் புது புது யுத்திகளை கையாண்டு வாக்குகளை வளைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.செல்லக்குமார் களக்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வாக்கு கேட்க சென்ற இடத்தில் 200-க்கும் மேற்பட்டோரை தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுபினர்களாக இணைத்துவிட்டுள்ளார்.
செல்லக்குமார் பிரச்சாரம் செய்ய சென்ற கடம்போடு கிராமத்தில், பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் இல்லையாம். இதனால் இது குறித்த விசாரித்த அவருக்கு, ஊரில் பாதி பேர் கொத்தனாராகவும், சித்தாளாகவும் வேலைபார்க்கும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாலை நேரத்தில் அவர்கள் வேலை முடித்து வீடு திரும்பும் நேரத்தில் மீண்டும் சென்ற அவர் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் குறித்து எடுத்துக்கூறியுள்ளார்.
அந்த வாரியத்தில் உறுப்பினராக சேர்வதன் மூலம் தமிழக அரசு மூலம் கிடைக்கும் பலன்களை எடுத்துக்கூறியுள்ளார். மேலும், இது கலைஞர் கொண்டுவந்தது, இப்போது அதை அதிமுக முடக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கையோடு கொண்டுவந்திருந்த படிவங்களை பூர்த்தி செய்து 200-க்கும் மேற்பட்ட கொத்தனார் வேலை பார்ப்பவர்களை அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர்களாக இணைத்தார். இதன்மூலம் தனக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்தில் கணிசமான வாக்குகளை காங்கிரசுக்கு வளைத்துவிட்டார் செல்லக்குமார்.
இந்தத்தகவல் அதிமுகவினருக்கு கிடைக்க, ஆஹா, நடப்பது நம்ம ஆட்சி ஆனால் நம்ம இதை செய்யாம இப்படி கோட்டைவிட்டுவிட்டோமே என பதறியுள்ளார்கள்.