நின்றால் காங்கிரசுக்கே வெற்றி.. ஆனால் திமுக முடிவெடுத்தால்.. குமரியில் மையம் கொள்ளும் தேர்தல் புயல்
குமரியில் திமுக போட்டியிட முனைப்பு காட்டுமா?
சென்னை: திமுகவுக்கு செம சான்ஸ் ஒன்று, குமரியில் மையம் கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.. இதை சாமர்த்தியமாகவும், நாசூக்காகவும் பயன்படுத்தி கொள்வதில்தான் திமுகவின் தற்போதைய திறமையே அடங்கி உள்ளது!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.. அதிமுகவில் பாஜக உள்ளது.. திமுகவுக்கும் - காங்கிரசுக்கும் அளவுக்கு அதிகமான இணக்கமான போக்கு இல்லை.. அதிருப்திகள் நிறைய உள்ளன.. இதற்கு கேஎஸ் அழகிரியின் பல பேட்டிகள், சர்ச்சை கருத்துக்களே சாட்சி!
அதுமட்டுமில்லை.. திமுகவை வைத்துதான் காங்கிரசுக்கு ஆதாயம் இருக்கிறதே தவிர, காங்கிரஸால் திமுகவுக்கு போதுமான பலன் இல்லை என்ற பேச்சு பரவலாக எழுந்து வருகிறது.. அதனால், தாமே கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் என்ன? என்ற யோசனையில் திமுக இருப்பதாகவும் சமீப நாட்களாகவே செய்திகள் கசிந்து வருகின்றன.
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங், விசிக எம்.பிக்கள் போராட்டம்
கருத்து கணிப்பு
இதை அடிப்படையாக வைத்து நாமும் நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.. அதில், "கன்னியாகுமரி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?" என்ற கேள்வியை எழுப்பினோம். "காங்கிரஸ்" என்ற ஆப்ஷனுக்கு 42.29 சதவீதம் பேரும், "பாஜக" என்ற ஆப்ஷனுக்கு 14.39 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.. அதேபோல, "திமுக போட்டியிட்டால் வெல்லலாம்" என்பதற்கு 27.78 சதவீதம் பேரும், "அதிமுக போட்டியிட்டால் வெல்லும்" என்ற ஆப்ஷனுக்கு 5.92 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
காங்கிரஸ்
கன்னியாகுமரி எப்போதுமே காங்கிரஸ் மண்தான் என்பதை மறுபடியும் அழுத்தமான வாக்குகளால் பதிவு செய்துள்ளனர் வாசகர்கள்.. 42.29 சதவீதம் பேர் காங்கிரஸ் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.. நாடு முழுவதும் வளர்ந்து வரும் பாஜக முன்பு, கன்னியாகுமரியில் காங்கிரசின் ஈர்ப்பு சற்றும் குறைவில்லை என்பதையே இது எடுத்து காட்டுகிறது.
பாஜக
அதேபோல, பாஜக வெல்லலாம் என்ற ஆப்ஷனுக்கு 14.39 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இது பாஜக மீதான அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.. ஏற்கனவே பொன்.ராதாகிருஷ்ணன் மீது அந்த தொகுதி மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.. அவர்களின் நேரடி கோபம் அவர் மீது உள்ளதற்கு காரணம், குளச்சல் துறைமுகம் சமாச்சாரம் அப்படியே கிடப்பில் இருப்பதுதான். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதையும் இந்த வாக்கு சதவீதம் சுட்டிக்காட்டுகிறது. அதனால் குமரியில் பாஜகவுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
அதிமுக
ஆனால், திடீர் திருப்பமாக, திமுக போட்டியிட்டால் வெல்லலாம் என்பதற்கு 27.78 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இது புதிய திருப்பம் ஆகும்.. பலம்பொருந்தி வரும் அதிமுகவை சமாளிக்கவும், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக + பாஜகவுக்கு ஒரு ஷாக் கொடுக்கவும் இந்த் தொகுதியை திமுகவே கையில் எடுத்துப் போட்டியிட்டால், காங்கிரஸும் ஒத்துழைத்தால்.. நிச்சயம் பெரிய திருப்பமாகவே இது இருக்கலாம் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. இந்த கன்னியாகுமரி தேர்தலை ஒரு டிரையலாக அதாவது வெள்ளோட்டமாககூட திமுக பயன்படுத்தி பார்க்கலாம்.
சிறுபான்மையினர்
எப்படி பார்த்தாலும், இந்த தொகுதியில் சிறுபான்மை ஓட்டுகள் யாருக்கு அதிகம் விழுகிறதோ அதை வைத்துதான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பதால், திமுக தாராளமாகவே துணிந்து குமரியில் கால் வைக்கலாம்!