ப.சிதம்பரத்தை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்...! யார் நடத்தியது தெரியுமா?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் குதித்தனர். ஆனால், முன்னாள் மத்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான சிபிஐ கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் பெரியளவில் அக்கட்சியினர் போராட முன்வரவில்லை.
இதையடுத்து கர்நாடக காங்கிரஸை பார்த்து சுதாரித்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, போராட்ட நெருப்பை கட்சியினரிடம் பற்ற வைத்தார். அதன் எதிரொலியாக கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னை, கோவை, சிவகங்கை, உள்ளிட்ட நகரங்களில் மோடி அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக திகழும் சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவையினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா, ஹசீனா சையத் உள்ளிட்ட நிர்வாகிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்ததோடு, உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் தொடர் சொற்பொழிவும் ஆற்றினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.