"ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்.. திமுக கூட்டணி சூப்பரா இருக்கு.. பேரம் பேச மாட்டோம்".. காங். அதிரடி
திமுக காங்கிரஸ் வலுவாக உள்ளது என்று தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
சென்னை: "தமிழகத்தில் எங்க பலம் என்னனு தெரியும். அதற்கேற்ப திமுகவிடம் சீட் கேட்போம்.. சீட்டுகளையும் அடையாளம் காண ஆரம்பித்து விட்டோம். கூட்டணி சூப்பரா இருக்கு.. நிச்சயம் ஜெயிப்போம்" என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸின் மேலிடப் பார்வையாளரான தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
Recommended Video
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு சொற்ப சீட்களே தரப்படும் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்ப பல மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் அடி வாங்கியபடி உள்ளது. அதை வைத்துத்தான் குஷ்பு கூட சமீபத்தில், போவதைப் பார்த்தால் காங்கிரஸை எல்லோரும் தேவையில்லாத லக்கேஜ் என்று கழற்றி விட்டாலும் விடலாம் என்று நக்கலடித்திருந்தார்.
இந்த நிலையில், திமுகவுடன் இணக்கமாக போக காங்கிரஸ் முடிவு செய்து விட்டதை தினேஷ் குண்டுராவே தனது வாயால் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் திமுக கொடுப்பதை காங்கிரஸ் தட்டாமல் வாங்கிக் கொள்ளும் என்பது தெளிவாகியுள்ளது.
தினேஷ் குண்டுராவ்
எதார்த்த நிலையைப் புரிந்து காங்கிரஸ் இப்படி டக்கென இறங்கி வந்திருப்பதாக கருதப்படுகிறது. தினேஷ் குண்டுராவ் இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: " எதார்த்த நிலையைப் புரிந்து வைத்துள்ளோம். திமுகவிடம் எங்களுக்கான தொகுதிகளை, சீட்களைக் கேட்போம். அதேசமயம், பேரம் பேச மாட்டோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த சிக்கலும் எழாது.
பிரச்சனை இல்லை
திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறோம், நல்ல வேட்பாளர்கள் யார் என்பதைய கண்டறிய ஆரம்பித்துள்ளோம். பிராக்டிகலாக நாங்கள் எதையும் பார்க்கிறோம். அதன்படியே தொகுதிகளையும், சீட்களையும் நாங்கள் தேர்வு செய்யவுள்ளோம்.
பீகார் முடிவு
வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும். அதுதான் முக்கியம். அதைத் தவிர வேறு எதையும் பரிசீலிக்க நாங்கள் தயாராக இல்லை. கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். பீகார் ரிசல்ட் வேறு, தமிழக தேர்தல் வேறு. தமிழகம் வித்தியாசமானது. பீகார் முடிவை இதனுடன் ஒப்பிடக் கூடாது. இங்கு திமுக மிகப் பெரிய கட்சி. மிகச் சிறந்த கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.
ஆதரவு
எங்களது கூட்டணிக்கு கடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைத்ததை யாரும் மறக்கக் கூடாது. பீகாரில் எங்களது கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவியது. ஆனால் தமிழகத்தில் எங்களது கூட்டணி ஒரு இடத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் வென்றது. இங்கு கூட்டணி வெற்றி பெற்றது. மக்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. இது தொடரும். திமுகவுக்கு வலு சேர்க்கும் வகையில் காங்கிரஸ் துணையாக இருக்கும். குறைந்தது 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸால் பலம் கூட்ட முடியும் , உதவ முடியும்.
தொகுதி பங்கீடு
அதேசமயம், எத்தனை சீட் வேண்டும் என்று திமுகவிடம் நாங்கள் வலியுறுத்தி கேட்க மாட்டோம்.. கண்டிப்பு காட்ட மாட்டோம்.. எதார்த்த நிலைக்கு ஏற்பவே கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அமையும். அனைவரும் இணைந்து சுமூகமான முறையில் பேச்சு நடத்துவோம். அதில் எந்தவித தேவையில்லாத பேரத்துக்கும் இடம் இருக்காது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர். அவரை முதல்வர் பதவியில் அமர்த்துவதே காங்கிரஸின் நோக்கம். அதற்கேற்பவே எங்களது செல்பாடுகள் இருக்கும்.
பிரச்சாரம்
ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று முதலில் கூறியதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அதை நாங்கள் மறக்க மாட்டோம். ராகுலை பிரதமராக்க விரும்பிய மு.க.ஸ்டாலினை நாங்கள் தமிழகத்தின் முதல்வராக்குவோம். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தி நிச்சயம் பிரச்சாரம் செய்வார். இதுதொடர்பாக விரிவாக திட்டமிடப்பட்டு வருகிறது. விரைவில் இது விவாதித்து முடிவு செய்யப்படும்" என்று தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
ஸ்டாலின்
திமுகவிடம் பேரம் பேச மாட்டோம்,, இறங்கிப் போவோம், அனுசரிப்போம், மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் என்று தினேஷ் குண்டுராவ் கூறியிருப்பதைப் பார்த்தால் பீகார் பாடத்தை காங்கிரஸ் வேகமாக கற்றுக் கொண்டு திருந்தி விட்டதாகவே கருதத் தோன்றுகிறது. எப்படிப் பார்த்தாலும் இது நல்ல மாற்றம்தான்.