மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி?.. பரபரப்பு விளக்கமளித்த தினேஷ் குண்டுராவ்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 41 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் வென்றது.
இந்த நிலையில் இந்த முறை திமுகதான் ஆட்சி அமைக்கும் ன சொல்லப்படும் நிலையில் அக்கட்சி தொகுதி பங்கீடு, தொகுதிகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவற்றில் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த முறை 30 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டு வருகிறது. ஆனால் திமுகவோ வெறும் 20 முதல் 24 வரை மட்டுமே ஒதுக்க முடியும் என கறார் காட்டி வருகிறது. இதனால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
30 தொகுதிகள்
அதே வேளையில் ராகுல் காந்தியும் 30 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்குமா இல்லை வேறு ஒரு கூட்டணிக்கு அணி மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தினேஷ் குண்டுராவ்
இந்த நிலையில் காங்கிரஸ் மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் என்றே தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப கமல் கட்சியில் இணைந்த பழ கருப்பையாவும் நேரடியாகவே தூக்கி போட்டுட்டு வாங்க என அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
யூகங்கள்
அவர் கூறுகையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். தொகுதி பங்கீடு தொடர்பான யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் என்னால் பதில் அளிக்க முடியாது.
தொகுதிகள்
மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இதனால் 3ஆவது அணியில் இணைய காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறதா இல்லை திமுகவே இவர்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முன் வந்துள்ளதா என்பது போக போகத்தான் தெரியும்.